அந்த 16 நிமிடம்.. சந்திராயன் 2 வெற்றிக்கு பின் இருக்கும் திருநெல்வேலி சீமை.. விஞ்ஞானிகள் புது சாதனை
சந்திரயான் 2ன் வெற்றிக்கு திருநெல்வேலி மாவட்டமும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.
திருநெல்வேலி: சந்திரயான் 2ன் வெற்றிக்கு பின் திருநெல்வேலி மாவட்டமும் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆம் திருநெல்வேலி மஹேந்திரகிரியில் உள்ள ISRO Propulsion Complex (IPRC) மையம் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
கடும் எதிர்பார்ப்புக்கு பின் இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நிலவை நோக்கி தன்னுடைய அசாத்திய பயணத்தை சாத்தியமாக்கி உள்ளது சந்திரயான் 2.
இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும். தற்போது வெற்றிகரமாக பூமியின் குறைந்த 170 கிமீ வட்டப்பாதையை சந்திரயான் அடைந்து உள்ளது. செப்டம்பர் 7ம் தேதி நிலவை சந்திராயன் 2 அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்டபோது.. செம க்ளிக்!
எப்படி காரணம்
சந்திரயான் 2ன் இந்த வெற்றிக்கு திருநெல்வேலி மாவட்டமும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது. திருநெல்வேலி மஹேந்திரகிரியில் உள்ள ISRO Propulsion Complex (IPRC) மையம்தான் சந்திரயான் 2 அனுப்பப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மகேந்திரகிரியில்தான் திரவ எரிபொருள் என்ஜின் அதாவது கிரையோஜெனிக் என்ஜின் உருவாக்கப்படுகிறது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்க கூடியது. இதன் மூலமே சந்திரயான் 2 செலுத்தப்பட்டது.
கிரையோஜெனிக் எப்படி
இந்த கிரையோஜெனிக் எஞ்சின் தொடக்க காலத்தில் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக இருந்தது. இதன் தொழில்நுட்பத்தை ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு தர மறுத்தது. அதனால் நாம் எஞ்சின்களை கடன் வாங்கி பயன்படுத்தி வந்தோம். பலமுறை இந்த எஞ்சினை உருவாக்க முயன்று இஸ்ரோ தோல்வி அடைந்து இருக்கிறது.
ஆனால் வெற்றி
திரவ ஆக்சிஜனை -183 °C [90 K] மற்றும் திரவ ஹைட்ரஜனை -253 °C [20 K] வெப்பநிலை வரை கொண்டு சென்று அதை எரிபொருளாக பயன்படுத்தி இந்த எஞ்சின் இயக்கப்படும். ஆனால் ராக்கெட் செல்லும் போது இந்த வெப்பநிலையை கட்டுப்படுத்துவது கடினம். இதை சரி செய்வதற்காக திருநெல்வேலி மஹேந்திரகிரி இஸ்ரோவில் தீவிரமாக ஆராய்ச்சி நடந்தது.
தீவிரம்
முழுக்க முழுக்க திரவ எரிபொருள் சோதனைகளை மட்டும் திருநெல்வேலி மஹேந்திரகிரி இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதில் சில வருடங்களுக்கு முன் வெற்றியும் கண்டது. கிரையோஜெனிக் எஞ்சின் மூலம்தான் 1000 கிலோவிற்கு அதிகமான எடை கொண்ட சாதனங்களை எளிதாக கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இந்த எஞ்சின் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று முக்கியம்
இன்று விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்க கூடியது. இதில் இரண்டாவது எஞ்சின் கிரையோஜெனிக் என்ஜின் ஆகும். இது மட்டும் 16 நிமிட பயணத்தில் 8 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிரையோஜெனிக் என்ஜின் எப்போதையும் விட இந்த முறை 15% அதிக திறனுடன் இயங்கியது. இதை உருவாக்கியதில் மஹேந்திரகிரி இஸ்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழ்த்துக்கள்
ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கிரையோஜெனிக் என்ஜின்களுக்கு இணையாக இஸ்ரோ உருவாக்கிய கிரையோஜெனிக் என்ஜின் இன்று இயங்கியது. இதற்கு திருநெல்வேலி மஹேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடினமான உழைப்பும் முக்கிய காரணம் ஆகும்!