நாங்குநேரியில் காங். தனித்து போட்டி? கூட்டணி முறியும் அளவிற்கு ஆதங்கத்தை கொட்டிய கே.எஸ். அழகிரி
நெல்லை: கூட்டணியின்றி காங்கிரஸ் கட்சியால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாதா என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த நிலையில் கே எஸ் அழகிரி தொண்டர்கள், நிர்வாகிகள் முன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க போகிறேன். 50 ஆண்டுகளாக நாம் ஏன் எதிர்க்கட்சியாக உள்ளோம்?
நாங்குநேரியில் நாங்களே நிற்போம்.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்.. அதிரடி தீர்மானம்
பலம்
தனித்து போட்டியிட்டால் நம்மால் வெற்றி பெற முடியுமா, முடியாதா? கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய தென்மாவட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் வேர், உயிர் நாடி. இங்கெல்லாம் நாம் பலமாக இருக்கிறோம்.
வெற்றி
அப்படியிருக்கும் போது தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா முடியாதா. இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த செயல்வீரர்கள் கூட்டமே நடத்தப்படுகிறது. குறைந்தபட்சம் தெருவில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதை ஆராய வேண்டும்.
கட்டுப்பாடு இல்லாத கட்சி
வாக்குச் சாவடியை கைப்பற்ற முடியாவிட்டாலும் பாதுகாக்கும் ஆற்றல் காங்கிரஸுக்கு இருக்கிறதா. மற்ற கட்சிகளை போல் காங்கிரஸ் கட்சியில் கட்டுப்பாடுகள் இல்லை. கட்டுப்பாடு இல்லாத கட்சி வெற்றி பெறாது.
6 சட்டசபை தொகுதிகள்
50 ஆண்டுகளாக மேடை கட்டுப்பாடு நம்மிடம் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது என்பது பெரும் கஷ்டமாகும். அது நடக்கவே நடக்காது என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். கே எஸ் அழகிரி சொல்வது போல் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி தேர்தலில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸே முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பரபரப்பு
இந்த கூட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என கூறினால் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் தனித்து போட்டியிடும் என தெரிகிறது. நாங்குநேரியில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பதில் சொல்வதாக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் கே எஸ் அழகிரியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.