சூடுபிடிக்கிறது கமல் அரசியல்.. திமுக, அதிமுக பாணியில் கூட்டம்.. நெல்லையில் மாஸ் காட்ட திட்டம்!
மக்கள் நீதி மய்யம் சார்பாக இன்று திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி: மக்கள் நீதி மய்யம் சார்பாக இன்று திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவு விழாவை அடுத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இந்த லோக்சபா தேர்தல்தான் அக்கட்சி சந்திக்க போகும் முதல் தேர்தல் ஆகும்.
இந்த நிலையில் தேர்தலுக்கு முன் நிறைய பொதுக்கூட்டங்களை நடத்த கமல்ஹாசன் திட்டமிட்டு இருக்கிறார். அதன் ஒருபகுதியாக இன்று திருநெல்வேலியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
பெரிய மேடை
இந்த பொதுக்கூட்டத்திற்காக பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. விசாலமான மேடையில் நடுவில் கமல்ஹாசன் அமர பெரிய இருக்கையும், அதன் இரண்டு பக்கமும் முக்கிய உறுப்பினர்கள் அமரவும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஒருவாரமாக பணிகள் செய்யப்பட்டு இந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆலோசனை
மக்கள் நீதி மய்யம் இதுவரை நடத்திய சில பொதுக்கூட்டங்கள் போல இல்லாமல் இது பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட இருக்கிறது. இதற்காக நான்கு முறைக்கும் மேல் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இன்று மதியம் இன்னொரு ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட உள்ளது.
திமுக,அதிமுக பாணி
மக்கள் நீதி மையம் கட்சி திமுக, அதிமுக பாணியை விட்டுவிட்டு புதிதாக அரசியல் செய்து வருகிறது. ஆனால் இந்த பொதுக்கூட்டம் மட்டும் கொஞ்சம் திமுக, அதிமுக நடத்ததும் தேர்தல் பொதுக்கூட்டங்கள் போலவே உருவாக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பெரிய மேடைகள், கட் அவுட்கள், இருக்கை அமைப்பு என்று தமிழக அரசியல் பாணியே இதிலும் பின்பற்றப்பட்டுள்ளது.
கூட்டம் முக்கியம்
இந்த கூட்டம் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட உள்ளதால் இதில் அதிக மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1 லட்சம் பேருக்கும் அதிகமாக இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். விழா நடக்கும் பகுதியிலும் இதற்காக அத்தனை இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. சமயங்களில் 1 லட்சம் பேரை தாண்டுவதற்கு கூட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.