தனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி
நெல்லை: நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தை தடை செய்து இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ. கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை வலியுறுத்தியுள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் இன்று நெல்லை போலீஸில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
1991-ம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறது.
தென்மாவட்டங்களில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இது போன்ற திரைப்படங்களால் மீண்டும் கலவரம் ஏற்படும் நிலை உருவாகிறது.
இத்திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என பெயரிடப்பட்ட கட்டிடத்தை தனுஷ் தாக்குவதாகவும் காட்சி இடம்பெறுகிறது. இது காவல்துறையின் கண்ணியத்தை சீர்குலைக்கிறது.
ஆகையால் இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்து தனுஷின் கர்ணன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.