4 மணி நேரம்... 60000 தேனீக்கள்.. வித்தியாசமான கின்னஸ் சாதனை படைத்த கேரள இளைஞர்!
கேரளாவில் தேனீக்களை அதிக நேரம் முகத்தில் இருக்க வைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் நேட்சர் எனும் இளைஞர்.
திருவனந்தபுரம் : தேனீக்களை அதிக நேரம் முகத்தில் இருக்க வைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
சுறுசுறுப்புக்கு உதாரணமாக எடுத்துக்காட்டப்படும் தேனீக்கள், நிஜத்தில் மனிதர்களுக்கு அச்சம் தரக்கூடியவை. காட்டிற்குள் தேனீக்கள் படையெடுத்து வந்தால் அந்த இடத்தில் இருக்கும் பெரிய விலங்குகள்கூட சிதறி ஓடிவிடும். அந்த அளவுக்கு ஆபத்தானவை தேனீக்கள்.
ஆனால் தேனீக்களை தனது உடல் முழுவதும் உலவவிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் நேட்சர் எம்எஸ். 4 மணி நேரம் 10 நிமிடங்கள் 5 வினாடிகள், சுமார் 60000 தேனீக்களை தனது முகத்தைச் சுற்றி மொய்க்கவிட்டு அசத்தி இருக்கிறார். அவரது இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
தேனீக்களுடன் தான் நட்புக்கொள்ள காரணம் தனது தந்தை தான் என்கிறார் நேட்சர். "தேனீக்கள் தான் எனது சிறந்த நண்பர்கள். மற்றவர்களும் என் நண்பர்களிடம் நட்புக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். தேனீக்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு எனது தந்தை கூறியது விஷயம் தான் நினைவுக்கு வரும். உடனே அதன் மீதிருக்கும் பயம் மறைந்துவிடும்", எனக் கூறுகிறார் பெயரிலேயே இயற்கையை வைத்திருக்கும் நேட்சர்.
நேட்சரின் தந்தை ஒரு தேனீ விவசாயி. தேனீ பண்ணை வைத்து தேன் வியாபாரம் செய்து வரும் அவர், மத்திய, மாநில அரசுகளிடம் பல விருதுகளை பெற்றவர். "தேனீக்களிடம் அமைதியாக இருக்க வேண்டும். அவற்றை நண்பர்களாக பார்க்க வேண்டும். ஆழமாக சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்கக்கூடாது என என் தந்தை அடிக்கடி கூறுவார்", என்கிறார் நேட்சர்.
தேனீக்களை உடலில் உலவவிடுவதற்கு எப்படி பயிற்சி எடுத்தீர்கள் என நேட்சரிடம் கேட்டார், "சிறுவயதில் இருந்தே நான் தேனீக்களுடன் பழக ஆரம்பித்துவிட்டேன். ஒருநாள் ஒரு ராணி தேனீயை எடுத்து என் கையில் வைத்துக்கொண்டேன். சிறிது நேரத்தில் மற்ற தேனீக்கள் எல்லாம் அதை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டன. தனது கையில் வந்து அமர்ந்து ராணியை பாதுகாக்க தொடங்கிவிட்டன. அதுபோன்று அடிக்கடி செய்து பார்ப்பேன். அப்படி தான் தேனீக்களை என் மீது மொய்க்கப் பழகினேன்", என்கிறார் அசால்ட்டாக.
3 தனி தனி பிரிவுகள்.. லடாக் எல்லையில் இந்திய ராணுவம் அமைத்த "வளையம்''.. சீனா இனி நெருங்க முடியாது!
இயற்கை ஆர்வலரான நேட்சர், தனது வாழ்நாள் முழுவதையும் தேனீக்களுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளார். "தேனீக்களின் கொடுக்குகளை பார்த்து மக்கள் பயப்படுகின்றனர். நம் சமூகத்தின் மிக முக்கியமான பூச்சி இந்த தேனீக்கள். அவை இருந்தால் தான் இந்த பூமியும் இருக்கும்", என்கிறார் முகத்தில் இருக்கும் தேனீக்களை விலக்கியபடியே பேசும் நேட்சர். அவரது சாதனை மென்மேலும் தொடர நாமும் வாழ்த்துவோம்.