கேரளாவின் குப்பைத் தொட்டியாக மாறி வரும் தமிழகம்.. தொடரும் அக்கிரமம்!
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியறைக்கு, கேரளாவிலிருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
தமிழகத்திற்கு கழிவுகளை கொண்டு வர வேண்டாம் என கேரளா அரசிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ள நிலையில், கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது தொடர்கதையாக உள்ளது.
கேளராவில் இருந்து தமிழகத்திற்கு இறைச்சி, மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை டன் கணக்கில் கொண்டு வந்து கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், சாலையோரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்தன.
தொடர்ந்து சிறை பிடிப்பு
மேலும், கோவை, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்ட வரும் கேரளா வாகனங்களை மக்கள் சிறைபிடித்து அவ்வப்போது திருப்பி அனுப்பி வரும் சம்பவங்களும் நடக்கின்றன.
கேரளாவில் தடை
கேரளாவில் இயற்கை வளத்தை அழிக்க அனுமதியில்லை. மாறாக அவற்றை பாதுகாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் திட்டம் தீட்டுகின்றனர். அதே போல், விளைநிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இறைச்சி கழிவுகள், ஹோட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவற்றையும் பொது இடங்களில் கொட்ட அனுமதிப்பதில்லை.
தமிழகத்தில்
இதனையடுத்து, பணம் கொடுத்து, கேரள எல்லையில் உள்ள தமிழக கிராமப்புற பகுதிகளில் லாரிகள், மினி ஆட்டோக்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டிச் செல்லப்படுகின்றன. இரவு நேரங்களில் பெரும்பாலும் கழிவுகள் எடுத்து வரப்படுகின்றன. பெரும்பாலும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களில் கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வரப்படுவதாக கூறப்படுகிறது.
27 லாரிகள் சிக்கின
இந்தநிலையில், நெல்லை மாவட்டம் புளியறைக்கு கேரளாவில் இருந்து 27 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எல்லையிலே மடக்கி அதிகாரிகள் அவற்றுக்கு அபராதம் விதித்தனர். அதன் பின்னர் அவற்றை கேரளாவிற்கு திருப்பி அனுப்பினர்.