காங்கிரசுக்கு வாக்களிக்க வருபவர்கள் தடுத்து நிறுத்தம்... கே.எஸ்.அழகிரி ஆவேசம்
நெல்லை: நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்களிக்க விடாதவாறு அதிமுகவினர் தடுப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். அதிமுக என்ன தான் தடுத்தாலும் வெற்றித் திருமகள் தங்களை நோக்கியே வருவார் என்றும், அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றிப்பெறப்போவது உறுதி எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் அதிமுக தமிழகத்தில் பலவீனம் அடைந்துவருவதாக கிண்டலடித்தார்.
தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் ஆளுங்கட்சியின் பணபலத்துக்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் போர் எனக் குறிப்பிட்டார். பணபலத்தையும், அதிகார பலத்தையும் நம்பி அதிமுக வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டதாகவும், ஜனநாயகத்தையும், மக்களையும் நம்பி காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டதாகவும் கூறினார்.
நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்.. தொடங்கியது வாக்குப்பதிவு.. மக்கள் வாக்களிக்க ஆர்வம்!
விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக அதிமுக ரூ.100 கோடி வரை பணத்தை தண்ணீராக வாரி இறைத்துள்ளதாக கூறிய அவர், செய்வதை எல்லாம் செய்துவிட்டு கூட்டணி கட்சியான திமுக எம்.எல்.ஏ.மீது வழக்குப்போட்டுள்ளது அதிமுக அரசு என சாடினார். இந்த நிலை தொடராது என்றும், ஆட்சி மாற்றத்திற்கு முன்னோட்டமாக இடைத்தேர்தல் வெற்றி அமையும் எனக் கூறினார்.
விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவு என்பது தமிழகத்தின் வருங்காலத்தை முடிவு செய்யும் தேர்தல் என்பதால் மக்கள் இந்த தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.