கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... ஜூலை- 10ல் கருத்துகேட்பு கூட்டம்
நெல்லை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை- 10ல் கருத்துகேட்பு கூட்டம் நடைபெறும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அணு உலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவுகள், உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும் வசதி தான் Away From Reactor எனப்படும் அணுக்கழிவு மையம்.
இந்த அணுக்கழிவு இந்தியாவிலேயே முதன் முதலாக கூடங்குளத்தில் தான் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி ராதாபுரம் என்.வி.சி அரசு பள்ளியில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கூடன்குளம் அணு உலை மையத்தில் 1000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அணு உலைகளில் எரிபொருளாக பயன்படும் யுரேனியும் பயன்பாட்டுக்குப் பிறகு, புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்கு கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது.
இந்த மையத்தில் நிரந்தரமாக கழிவுகள் சேமித்து வைக்கப்படாது என்றாலும் நிரந்தரமாக அணுக்கழிவுகளை சேமித்து வைப்பதறகான Deep Geological Repository வசதியை ஏற்படுத்தும் வரை அணுக் கழிவு மையத்தைக் கட்டக்கூடாது என்று பலவேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவுத்துள்ளனர்.
கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைகளைக் கூறி அணு உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக் கழிவு மையத்தை, 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும்.
இதையடுத்து அணுக்கழிவு மையத்தை உருவாக்க கால அவகாசம் கோரிய நிலையில், அணுக்கழிவு மையத்தை அமைக்க மேலும் 5 ஆண்டுகளுக்கு அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது
முன்னதாக, கூடங்குளம் அணு உலையிலிருந்து கிடைக்கும் அணுக்கழிவானது கோலார் தங்க வயலில் சேமிக்கப்படும் என்று என்ற தகவலும் வெளியான நிலையில், தற்போது கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.