நட்டாற்றில் தவித்த வனிதா.. காப்பாற்ற முயன்ற சங்கரநயினார்.. தாமிரபரணியில் மூழ்கி பலியான காதலர்கள்!
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி காதலர்கள் உயிரிழந்துவிட்டனர்
Recommended Video
திருநெல்வேலி: ஆற்றில் குளிக்க சென்ற காதலி திடீரென நீரில் மூழ்கிவிட்டார்.. அவரை காப்பாற்ற சென்ற காதலனும் தண்ணீரில் தத்தளித்து உயிரிழந்துள்ளது நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வனிதா. 20 வயதாகிறது. அங்குள்ள ஒரு தனியார் காலேஜில் பிஏ கடைசி வருடம் படித்து வந்தார்.
இவர் சங்கரநயினார் என்பவரை 2 வருடமாக காதலித்து வந்தார். சங்கரநயினாருக்கு 21 வயதாகிறது. வனிதாவின் உறவினர் இவர். அதனால் இவர்களின் காதலுக்கு வீட்டில் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. வனிதாவின் படிப்பு முடிந்ததும், அடுத்த வருடம் இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சங்கரநயினாருக்கு பிறந்த நாள். அதனால் காதலர்கள் இருவரும் பைக்கில் சுற்றி திரிந்தனர். மதியம் ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். திரும்பவும் பைக்கில் ரவுண்டு வந்தனர். அப்போது சாயங்காலம் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக, அருகன்குளம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றனர். இருவருமே ஆற்றில் இறங்கி குளித்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக வனிதா ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த சங்கரநயினார் வனிதாவை காப்பாற்ற முயற்சி செய்தபோது, அவரும் அந்தஆழ பகுதியில் நீரில் மூழ்கினார். 2 பேரும் நட்டாற்றில் தத்தளித்து கிடப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் அவர்களை காப்பாற்ற ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் காதலர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
தகவலறிந்து பாளை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இருவரின் சடலங்களை கண்டு உறவினர்கள் கதறி கதறி அழுதது ஊர்மக்களுக்கு கண்கலங்க வைத்துவிட்டது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.