தாமிரபரணி மகா புஷ்கரம் : ஆளுநர், துணை முதல்வர் உள்பட 20 லட்சம் பேர் புனித நீராடினர்
தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். ஆளுநர், துணைமுதல்வர் உள்ளிட்ட 20 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
Recommended Video
திருநெல்வேலி: பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரை விழாக்கோலம் பூண்டுள்ளது. மகாபுஷ்கரம் விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி தாமிரபரணி அன்னைனை பூக்கள் தூவி வணங்கினர்.
குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு. சென்ற வருடம் குருபகவான் துலாம் ராசியில் பிரவேசித்தபோது, துலாம் ராசிக்கு உரிய காவிரி நதியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகள் ராசிக்கு மாறியிருகிறார்.
இதையடுத்து தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அக்டோபர் 11ஆம் தேதியன்று புஷ்கர விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடக்கி வைத்து நீராடினார்.
மகா புஷ்கர விழா
ஒவ்வொரு ராசியில் குரு சஞ்சரிக்கும் போது நாட்டில் உள்ள நதிகளில் மகாபுஷ்கரம் நடைபெறுகிறது. மேஷம் ராசியில் குரு இருக்கும் போது கங்கை நதியில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. ரிஷபம் - நர்மதை, மிதுனம் - சரஸ்வதி,கடகம் - யமுனை, சிம்மம் - கோதாவரி, கன்னி - கிருஷ்ணா, துலாம் - காவிரி, விருச்சிகம் - தாமிரபரணி, தனுசு - சிந்து மகரம் - துங்கபத்ரா, கும்பம் - பிரம்மபுத்ரா, மீனம் ராசியில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் பரணீதா நதியில் மகாபுஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.
149 படித்துறைகளில் நீராடல்
மகா புஷ்கர விழாவுக்காக தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகள் சரிசெய்யப்பட்டன. குறிப்பாக பாபநாசம், அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், நெல்லை, அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மங்கல ஆரத்தி
வற்றாத ஜீவநதியாம் தாமிபரணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி பூக்களை தூவி வழிபட்டனர். விளக்குகளை ஏற்றியும் மரியாதை செய்தனர். தினசரியும் மாலையில் ஆர்த்தி விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். குறிப்பாக மகா ஆர்த்தியில் பக்தர்கள் கலந்துக் கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
ஓபிஎஸ் புனித நீராடல்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீன ராசிக்காரர். இன்றைய தினம் காலையில் பாபநாசம் கோவிலுக்கு பின்புறமுள்ள ராஜேஸ்வரி கோவில் படித்துறையில் நீராடினார். அவருடன் ஏராளமான பக்தர்களும் நீராடினார். தினசரியும் அவரவர்கள் ராசிப்படி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
அன்னதானம்
அருவங்குளம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடம் இராமாயணத்தில் ஜடாயு உயிர் நீத்த இடம் என அழைக்கப்படுகிறது.சீவலப்பேரி இந்த ஊரில் தாமிரபரணி நதியுடன் மேலும் இரண்டு ஆறுகள் இணைவதால் முக்கூடல் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இங்கே புகழ்பெற்ற துர்க்கை அம்மன் கோவிலும் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவிலும் ஆற்றுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம் காசிபநாதர் படித்துறையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரியும் புனித நீராடி வருகின்றனர். நீராட வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
முறப்பநாடு கைலாசநாதர்
முறப்பநாடு இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. மேலும் இக்கோவில் குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.இங்கே கைலாசநாதர் குருவின் அம்சமாகவே காட்சி தருகிறார். இந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும். விருச்சிக ராசியில் தொடங்கி இன்றைய தினம் சிம்ம ராசிக்காரர்கள் நீராடுகின்றனர். நாளைய தினம் கன்னி ராசிக்காரர்களும், 23ஆம் தேதி துலாம் ராசிக்காரர்கள் நீராடலாம் என்றாலும் அனைத்து ராசிக்காரர்களும் புனித நீராடலாம்.