அதெப்படி கோவிலுக்கு போகலாம்... மனைவியை அடித்துக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு
குடும்பத் தகராறில் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியை அடித்து கொலை செய்தார். காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி: சின்னச் சின்ன குடும்பத்தகராறுகள் இப்போது கொலையில் முடிகின்றன. கோவிலுக்கு தன்னிடம் சொல்லாமல் சென்று வந்த மனைவியை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மரணமடைந்த தம்பதியரின் பெயர் பழனிச்சாமி, பிச்சம்மாள் என்பதாகும். நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள நயினாரகரம் பேரூந்து நிறுத்தம் பகுதியில் பழனிச்சாமி தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். அவரது மனைவி பிச்சம்மாள் ஊர்மேல் அழகியான் என்ற பகுதியில் சத்துணவு ஆசிரியையாக உள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும்,ஒருமகளும் உள்ளனர்.
இன்று பணிக்கு விடுமுறை எடுத்திருந்த பிச்சம்மாள் உறவினர்களோடு வெள்ளிக்கிழமை என்பதால் இலத்தூரிலுள்ள ஒத்தபனை சுடலைமாடன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு உறவினர் வாகனத்தில் திரும்பி வந்துள்ளார்.
இவர் கணவனிடம் சொல்லிவிட்டு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்தார். பழனிச்சாமிக்கு மதுப்பழக்கம் இருந்ததால் மதுப்போதையில் இருந்த அவர் மனைவி பிச்சம்மாளை தாக்கியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த பிச்சம்மாள் கணவரின் தாக்குதலில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
மனைவியை தாக்கியதில் அவர் பலியானது போதை மயக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு தெரிய வரவே தான் மனைவியை அடித்து கொலை செய்து விட்டோம் என்ற அச்சத்திலும் ஜெயிலுக்கு போக வேண்டுமே என்ற பதற்றத்திலும் இருந்தார். மதுப்போதையில் இருந்த பழனிச்சாமியும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தப்போது இருவரும் இறந்த நிலையில் இருப்பதைக்கண்ட உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் செல்லவே விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு உடற்க்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.