ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் எதிரொலி.. தென் மாவட்டங்களில் குவியும் அதிர வைக்கும் புகார்கள்!!
நெல்லை: சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் கொடூரமாக காவல்துறையினரால் அடித்து, துன்புறுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த வழக்கு தற்போது கடுமையான நெருக்கடிக்கு பின்னர் சிபிஐ கைவசம் சென்றுள்ளது. இதற்கான ஆணையை நேற்று தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தானாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிக்க துவங்கியது.
உயிரிழந்த ஜெயராஜ் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சிறைக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ளுமாறு கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் பாரதிதாசனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஜெயராஜ்- பென்னிக்ஸ் சித்ரவதை.. கொன்றவர்களை சத்தியமா விடக் கூடாது- ரஜினிகாந்த் காட்டம்
மாஜிஸ்திரேட் விசாரணை
நேரடியாக சாத்தான்குளம் சிறைக்கு சென்று சாட்சியங்களை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சேகரித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சமர்ப்பித்து இருந்தார். ரத்தத்தை உறைய வைக்கும் வகையிலான கொடுமைகள் தந்தை, மகனுக்கு நேர்ந்து இருப்பது அவரது அறிக்கை மூலம் வெளியானது. மேலும் தான் எவ்வாறு மிரட்டப்பட்டேன் என்றும் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களையும் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் பலருக்கு அடி
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் எப்படியெல்லாம் அடித்து சித்ரவதை செய்தனரோ அதேபோல்தான், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் முன்பு பலருக்கும் நேர்ந்துள்ளதாம். அவர்கள் அனைவரும் தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார்களாக அளித்து வருகின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவத்திற்கு முன்பு அதே சிறையில் 28 வயது இளைஞரை அதே காவல்துறை அதிகாரிகள் லத்தியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
டிரைவருக்கு லத்தி அடி
இதேபோல் சாத்தான்குளத்தில் இருந்து 40 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் ஆறுமுகநேரி காவல் நிலையத்திலும் 33 வயது ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை அடித்து துன்புறுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அவருக்கு தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீழ் பிடித்த புண்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டு இருக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்றத்திற்கு புகார்கள் வந்துள்ளன. அனைத்துமே ஒரே மாதிரியாக லத்தியால் புட்டத்தில் அடித்து, பலத்த காயங்கள் ஏற்படுத்திய சம்பவங்கள்தான். காயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்காததால், அவர்களுக்கு ஏற்பட்ட புண் சீழ் பிடிக்கும் அளவிற்கு சென்று பெரிய அளவில் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கம்பி சூடு
இப்படி துன்புறுத்தப்பட்டவர்களில் ஒருவர்தான் முத்துக்குமார். காவல்துறையினர் இவரை லத்தியால் அடித்து அல்லது சூடுபடுத்திய கம்பியை பயன்படுத்தி சித்திரவதை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கான தடயங்களையும் சுகாதாரத்துறையின் தடவியல் துறை சேகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றதுக்கு ஒரு புகார் வந்து இருந்தது. அதில் தன்னை சாத்தான்குளம் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதில் காயம் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த ஜூன் 24 ஆம் தேதி சிகிச்சை அளிக்குமாறு நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பித்தது.
கட்டட வேலை செய்யும் மகேந்திரன்
கடந்த மே 22 ஆம் தேதி கட்டிட வேலை செய்யும் மகேந்திரன் என்பவரை சாத்தான்குளம் காவலர்கள் கைது செய்துள்ளனர். இவரை கடுமையாக தாக்கியதாக அவரது தாய் வடிவு புகார் கொடுத்துள்ளார். அதில், மே மாதம் 22ஆம் தேதி கைது செய்து இரண்டு நாட்கள் அடித்து துன்புறுத்தியதில் தனது மகன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மே 24ஆம் தேதி சிறையில் இருந்து வீட்டுக்கு வந்த மகேந்திரன் வலியை தாங்க முடியவில்லை என்று கதறி அழுதுள்ளார். இதையடுத்து அவரது வலது கை, வலது கால் செயல்படாததால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகேந்திரன் சேர்க்கப்பட்டார் என்று வடிவு தனது புகாரில் தெரிவித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூன் 13 ஆம் தேதி மகேந்திரன் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கிலும் சஸ்பென்ட் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வயிற்றில் எட்டி உதைத்த காவலர்கள்
இதேபோல் ஹபீப் முகம்மது என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர் செய்த குற்றம் மாஸ்க் அணியவில்லை. பீடி நுகர்ந்ததுதான். இவரை ஜூன் 9ஆம் தேதி இரண்டு பெண் காவலர்கள் சிறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நான்கு காவலர்கள் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். தோப்புக்கரணம் போடச் செய்துள்ளனர். பின்னர், குனிந்தவாறு நிற்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து இரண்டு மணி நேரம் இவ்வாறு நின்ற பின்னர் மதியம் 2.30 மணிக்கு வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதுமட்டுமில்லை, ஹபீப்பின் வயிற்றில் சரமாரியாக எட்டி உதைத்ததில் அவரது மூத்திரப்பை சேதமடைந்துள்ளது. ரத்தம் வழிந்துள்ளது. இதையடுத்து காயல்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹபீப் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
புகார்கள் குவிகின்றன
அங்கும், செல்லவிடாமல் ஆறுமுகநேரி சப் இன்ஸ்பெக்டர் தடுத்துள்ளார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்வதாக அப்போது ஹபீப் சொல்லி சமாளித்துள்ளார். தொடர்ந்து நிலைமை மோசமாக தனியார் மருத்துவமனையில் ஜூன் 18ஆம் தேதி வரை ஹபீப் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கும் காவலர்கள் வந்து புகார் கொடுக்க விடாமல் தடுத்துள்ளனர். இறுதியில் மாவட்ட சட்ட உதவி அதிகாரிகளின் ஆதரவுடன் நீதிமன்றத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார். இவ்வாறு தென் மாவட்டங்களில் காவல்துறையினர் மீது புகார்கள் குவிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.