மோடிக்கு தயாரா இருக்குது கருப்புக்கொடி… நெல்லையில் பொங்கிய வைகோ
நெல்லை:தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வரும் 27ம்தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வருகிறார். அன்று இரவு மதுரையில் நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.
தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய பிப்ரவரி 10 மற்றும் 19 ம்தேதிகளில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். 20 நாட்கள் இடைவெளியில் 2 முறை பிரதமர் மோடி தமிழகம் வருகிற செய்தி அறிந்த பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந் நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார். மோடியின் தமிழக வருகை குறித்து வைகோ நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மத்திய பாஜக அரசானது, தமிழகத்திற்கு எண்ணற்ற துரோகங்களை செய்துள்ளது. கன்னியா குமரி முதல் இமயம் வரை உள்ள மக்கள் மோடி அரசு மீது, வேதனையும், எதிர்ப்பும், கசப்பும், வெறுப்பும் கொண்டுள்ளனர்.
தமிழகத்திற்கு கேடுகளை செய்த பிரதமர் மதுரைக்கு வரும்போது கருப்புக் கொடி காட்டுவோம். கலவரம் ஏதும் செய்ய மாட்டோம். 2019-ம் ஆண்டு இந்திய அரசியலில் திருப்பு முனை ஆண்டாக அமையும் என்று வைகோ கூறினார்.