கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்.. போலீஸார் மீது தாக்குதல்
நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டம் நடத்திய போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 40 நாட்களுக்கு மேலாக வேலை இல்லாததால் அணுமின் நிலைய வளாகத்திலேயே தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. எனினும் அவர்கள் வேலைக்கு செல்லாமல் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை பணிகளை புறக்கணித்துவிட்டு அணுமின் நிலைய வாயிலில் 5000 பேர் போராட்டம் நடத்தினர்.
காட்பாடியிலிருந்து ஜார்க்கண்டிற்கு சிறப்பு ரயில்.. 1131 வடமாநிலத்தவர்கள் அனுப்பி வைப்பு
அவர்களை போலீஸார் கலைந்து போக கூறினர். ஆனால் அவர்கள் மறுத்தனர். அப்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் காயமடைந்த காவலர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.