அதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்
நெல்லை: நாங்குநேரி தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் ரேஷன் கடை பிரச்சனை தொடர்பாக இஸ்லாமியர்கள் பேசச்சென்ற போது, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.
நாங்குநேரி தொகுதிகுட்பட்ட களக்காடு பகுதியில் உள்ள கருவேலங்குளம் கிராமத்தில் தங்கி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக பிரமுகர் கலிலுல்லா என்பவர், கேசவநேரி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை பிரச்சனை தொடர்பாக அமைச்சரிடம் பேசி தீர்வு பெற்று தருகிறேன், நீங்க என்னோடு வந்தால் மட்டும் போது எனக் கூறி அந்தக் கிராமத்தை சேர்ந்த முக்கியமான நபர்கள் நான்கைந்து பேரை வலுகட்டாயமாக அழைத்துச்சென்றாராம்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் அவர்கள் விஷயத்தை சொல்ல, அவரோ, முஸ்லீம்கள் தான் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டீர்களே, பிறகு எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க என வினவினாராம். இதனால் அவர்களை அழைத்துச்சென்ற கலிலுல்லா தர்மசங்கடத்தில் நெளிந்ததுடன், ராஜேந்திரபாலாஜியை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், ராஜேந்திரபாலாஜியோ அதட்டல் குரலில், அதிமுகவுக்கு வாக்களிக்காத முஸ்லீம்களுக்கு ஏன் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றதோடு, உங்களிடம் நான் மனு வாங்க மாட்டேன், யாருக்கு ஓட்டு போட்டீர்களோ போய் அவரிடம் கொடுங்க என அவமானப்படுத்தினாராம். இதையடுத்து அதிமுக பிரமுகர் கலிலுல்லா பேச்சை நம்பி சென்ற இஸ்லாமியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக். ராஜேந்திரபாலாஜி விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியல் நாகரீகம் தெரியாமல் பேசி ராஜேந்திரபாலாஜி தமிழக அரசுக்கு அவப்பெயரை உருவாக்கியுள்ளதாக சாடியுள்ளார்.