பெருமாள் மேல் ஸ்டாலினுக்கு நம்பிக்கை இருக்கா என்று கேட்ட பாட்டி... ஆம் என்ற துர்கா - வைரல் வீடியோ
ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டு என்றும் அவர் சாமி கும்பிடுவார் என்றும் அவரது மனைவி துர்கா கூறியுள்ளார்.
திருநெல்வேலி: கடவுள் நம்பிக்கை சிலருக்கு இருக்கும், சிலருக்கு இருக்காது. திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டு என்று கூறியுள்ளார் அவரது மனைவி துர்கா. அவர் பெருமாளை வணங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் சுற்றுப்பயணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலினுடன் அவருடைய மனைவியும் சென்றுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த துர்கா, நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில்108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதுமாகும். துர்கா ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு வரும் போதெல்லாம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவார்.
நேற்று வந்தா துர்கா ஸ்டாலின் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். வானமாமலை மடத்தின் மடாதிபதியான மதுரகவி வானமாமலை இராமானுஜ ஜீயர் சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
கோவில் வளாகத்தில் வரும்போது அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய நாங்குநேரி சன்னதித் தெருவைச் சேர்ந்த மூதாட்டி பட்டுமாமி,85 என்பவர் வந்து கொண்டு இருந்தார்.
அந்த பாட்டியிடம் நலம் விசாரித்தார் துர்கா ஸ்டாலின் அப்போது அந்த மூதாட்டி நீங்கள் யார் என கேட்க அதற்கு அவருடன் இருந்தவர்கள் இவர்தான் திமுக ஸ்டாலின் மனைவி என்று கூறினர்.
அதற்கு அந்த பாட்டி திடீரென ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டா என கேள்வி கேட்டார். இதை சற்றும் எதிர்பாராத துர்கா, பெருமாள் மீது நம்பிக்கை உண்டு,கோவிலுக்கு வருவார் என சிரித்துக்கொண்டே சொன்னார். இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
மு.க ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று கூறப்படும் நிலையில் அவருக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டு என்றும், அவர் சாமி கும்பிடுவார் என்றும் அவரது மனைவி துர்கா கூறியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.