எதிரிகளை வெல்லும் வலிமை தரும் கீழப்பாவூர் நரசிம்மர் - வெற்றிக்கு வேண்டிய துர்க்கா ஸ்டாலின்
நரசிம்மர் கோயிலில் வழிபட்டால் அனைத்து வித சூழ்ச்சிகளையும் முறியடித்து எதிரிகளே இல்லை என்கிற நிலைமையை உருவாக்க முடியும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் கணவரின் வெற்றிக்காக வழிபட்டுள்ளார் துர்கா ஸ்டாலின்.
தென்காசி: சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றிக்காகவும், கணவர் ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்றும் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் துர்கா ஸ்டாலின். கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வழிபட்டால் அனைத்துவித சூழ்ச்சிகளில் இருந்தும் விடுபட முடியும் என்பது ஐதீகம்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
மக்களை நேரில் சந்திக்கும் ஸ்டாலின் மனுக்களை வாங்கி வருகிறார். அவருடன் சென்றுள்ள துர்கா ஸ்டாலின் அந்த தொகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.
துர்கா ஸ்டாலின் ஆலய தரிசனம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில், நாங்குநேரியில் உள்ள வானுமாமலை பெருமாள் கோயில், நெல்லையப்பர் கோயில்களுக்கு சென்ற துர்கா தனது சகோதரி மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனின் மனைவி ஆகியோருடன் சென்று வழிபட்டார்.
நரசிம்மரை வழிபட்ட துர்கா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். காலையில் ஸ்டாலின் அங்கு புறப்பட்டுச் சென்றதும், துர்கா ஸ்டாலின் தன்னோடு வந்திருந்தவர்களுடன் கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலுக்குச் சென்றார். கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅலர்மேல்மங்கா ஸ்ரீபத்மாவதி சமேத பிரசன்ன வேங்கடாசலபதி சுவாமியையும் தரிசித்தார்.
பழமையான கோவில்
தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் நரசிம்மர் கோயில் 1,100 வருடங்கள் பழமை வாய்ந்தது. இங்கு 16 திருக்கரங்களுடன் அபூர்வஸ்ரீ நரசிம்மர் காட்சியளிக்கிறார். இந்தக் கோயிலின் கல்வெட்டில் பெருமாளின் திருப்பெயர் முனையெதிர் மோகர் விண்ணகர் அதாவது போரில் எதிரிகளை வெல்பவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிக்கு வழிபாடு
நரசிம்மர் கோயிலில் வழிபட்டால் அனைத்து வித சூழ்ச்சிகளையும் முறியடித்து எதிரிகளே இல்லை என்கிற நிலைமையை உருவாக்க முடியும் என்பது ஐதீகம். அதனால் பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்தக் கோயிலுக்கு வழிபட்டு செல்கின்றனர். இந்தக் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேள்விப்பட்ட துர்கா ஸ்டாலினும் தனது கணவரின் தேர்தல் வெற்றிக்காக நேற்று கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
வெற்றி கிடைக்கும்
நரசிம்மர் கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்றால் நினைத்த காரியம் நடக்கும். எதிரிகளின் சூழ்ச்சியை எளிதில் முறியடித்து வெற்றிகளைக் கைப்பற்ற முடியும் என்பது நம்பிக்கை என்று கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலின் குருக்கள் ஆனந்தன் தெரிவித்துள்ளார். கோயிலின் தல புராணம் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் கேட்டார். கோயில் முழுவதையும் சுற்றிப் பார்த்தார்
என்றும் அவர் கூறினார்.