அவங்களை விடுங்க.. ஏன் நிறுத்தறீங்க.. பாதை அமைக்காட்டி ஊரே கூடி உட்காருவோம்.. பூங்கோதை ஆவேசம்
எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்எல்ஏ பூங்கோதை கோரிக்கை விடுத்துள்ளார்
Recommended Video
நெல்லை: "எதுக்கு நிறுத்தறீங்க அவங்களை.. விடுங்க.. ஊர்க்காரங்க எல்லாம் வாங்க.. இங்க தற்காலிகமாக மாற்று பாதை அமைக்கவில்லை என்றால், நாளைக்கே இங்க வந்து நாங்க உட்கார்ந்துடுவோம். தர்ணா பண்ண போறோம்" என்று திமுக எம்எல்ஏ பூங்கோதை தெரிவித்துள்ளார்.
பூங்கோதை... திமுகவின் முக்கிய, மூத்த அமைச்சர் மறைந்த ஆலடி அருணாவின் மகள்.. இவர் ஒரு டாக்டர்.. 10 வருடம் லண்டனில் வசித்தவர்.. ஆலடி அருணா கொல்லப்பட்ட பிறகு, தேர்தலில் நின்று அனுதாப அலை வெல்ல வைத்து, அமைச்சராகவும் உயர்ந்தவர்.. இப்போது சட்டமன்ற உறுப்பினரும் கூட.
ஒரு பிரச்சனை என்றால் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார் பூங்கோதை.. துணிந்து கேள்விகளை கேட்டுவிடுவார்... அதிலும் ஒருமுறை சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் பூங்கோதை மேஜை மீது ஏறி சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை யாராலும் மறக்க முடியாது.
அதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்களின் கட்சி.. முதல்வர் மாஸ் பிரச்சாரம்.. மக்கள் பெரும் வரவேற்பு!
மழைநீர்
இப்போது அம்பாசமுத்திரம் அருகே ஒரு பிரச்சனை.. அதற்காக நேரடியாக களத்துக்கே வந்துவிட்டார் பூங்கோதை. நெல்லையில் பொத்துக் கொண்டு ஊற்றி வருகிறது மழை.. இதனால் மாவட்டம் முழுவதுமே ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம் அருகே ஆழ்வார்குறிச்சி செங்கானூர் ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் அப்படி அப்படியே தேங்கிவிட்டது. அந்த மழைநீர் வெளியேறுவதற்கான வழியும் அங்கு இல்லை. அதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக சொல்லி பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
குறைகள்
இந்த விஷயம் கேள்விப்பட்டுதான் பூங்கோதை அங்கே வந்தார்.. முழங்கால் அளவுக்கு தண்ணீரில் மக்களும் குழந்தைகளும் அல்லல்படுவதை நேரில் கண்டார். எம்எல்ஏ பூங்கோதையும் புடவையை தூக்கி செருக்கி கொண்டு மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் அந்த பகுதிமக்களே திரண்டு வந்தனர். மாவட்டநிர்வாகம் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பூங்கோதையிடம் குறைகளை சொன்னார்கள்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து அதிகாரிகளுடன் பேச முயன்றார். அப்போது போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. உடனே பூங்கோதை, "எதுக்கு நிறுத்தறீங்க அவங்களை.. விடுங்க.. ஊர்க்காரங்க எல்லாம் வாங்க" என்று அவர்களை திரட்டி கொண்டு போய் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
1000 பேர் பாதிப்பு
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பூங்கோதை "இந்த பிரிட்ஜ் வேணாம், மக்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு ஏற்கனவே சொன்னோம், இதனால் பிரயோஜனம் இல்லை என்றும் சொன்னோம். ஆனால் இன்னைக்கு 7 அடி, 8 அடிக்கு தண்ணி நிக்குது. 500 வீடுகள் கொண்ட குடும்பங்களில்1000 பேர் செங்கானூரில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த பாலத்தை பயன்படுத்திதான் அவர்கள் எல்லாம் வேலைக்கு, பள்ளிக்கு போக முடியும்.
தர்ணா
ஆனால் இப்ப கூட ஒன்னும் கெட்டு போயிடவில்லை. தற்காலிகமாக ஒரு மாற்றுபாதை அமைத்து அரசு தர வேண்டும். இல்லையென்றால், நாளைக்கு நாங்க இங்க வந்து உட்கார்ந்துடுவோம். தர்ணா பண்ண போறோம்.. கலெக்டர்கிட்ட சொல்லிட்டோம்" என்றார்.