புனித ரமலான் : கட்டித்தழுவி வாழ்த்து சொன்ன பெருமக்கள் - கடையநல்லூரில் 10,000 பேர் சிறப்புத் தொழுகை
பிறை தெரிந்த உடன் உற்சாகமாக கட்டித்தழுவி ரமலான் பெருநாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழ்ந்தனர். கடையநல்லூரில் 10000 பேர் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி: ஈகைத்திருநாளான ரம்ஜான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற சிறப்புதொழுகையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாத காலமாக உண்ணா நோன்பை கடைப்பிடித்தனர். புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள், அடுத்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதுடன் ஈகைப் பெருநாளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் ஏராளமானோர் கொண்டனர்
புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
ஷவ்வால் பிறை
ரமலான் பிறை 29 நாட்கள் முடிந்ததை அடுத்து ஷவ்வால் பிறை வானில் தெரிந்ததை தொடர்ந்து கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது.
இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
ரமலான் பெருநாள்
அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் வளைகுடா மண்டல தலைவர் முகம்மநு நாஸிர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஷாகுல்கமீது, ஹாஜாதீன், ஹைதர் அலி, அப்துல் பாசித், செய்யது மசூது மாவட்டசெயலாளர் அய்யூப்கான், பஜார் கிளை தலைவர் குறிச்சி சுலைமான், ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில் தொண்டரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
பெருநாள் தொழுகை
இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் அப்துல் அஜீஸ், , ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் காராஸ் மைதீன்,மக்காநகர் 8வது தெரு தவ்ஹீத் திடலில் முகம்மது தாஹா, தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் ஹாமித் , இக்பால் நகர் தெப்பதிடலில் குல்லி அலி ஆகிய. 6 இடங்களில் நடை பெற்றது இந்த பெருநாள் தொழுகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகை
அதை போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் வடகரை, வீரணம் ,சங்கரன்கோவில் , புளியன்குடி ,வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும் 30 க்கும் மேற்பட்ட ஊர்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
நோன்பு பெருநாள் தர்மம்
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ் மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சக்திலேல் தலைமையில் காவல் ஆய்வாளர் கோவிந்தன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது