பாஜகவில் மன வருத்தத்தில் உள்ளேன்... நம்பி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை -நயினார் நாகேந்திரன்
நெல்லை: பாரதிய ஜனதா கட்சியில் தாம் மனவருத்தத்தில் இருப்பதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் இதனைக் கூறியுள்ளார்.
மாநில துணை தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மன வருத்தத்தில் இருப்பதாக கூறியிருப்பது பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மெகா ஆஃபர்.. ஒரு பக்கம் திமுக.. மற்றொரு பக்கம் அதிமுக.. கொரோனாவால் கதவை மூடிய நயினார் நாகேந்திரன்
மன வருத்தம்
அதிமுக முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரன் கடந்த 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அப்போதைய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலம் பாஜகவுக்கு வந்த இவர் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போதே நயினார் நாகேந்திரனின் அரசியல் செல்வாக்கு, அனுபவம், பணபலம், ஆட்பலம் உள்ளிட்ட விவரங்களை எல்லாம் அமித்ஷா காதில் போட்டுவைத்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.
கடும் முயற்சி
தமிழக பாஜக தலைவர் பதவியை குறிவைத்து செயல்பட்ட நயினார் நாகேந்திரன் இதற்காக பலமுறை டெல்லிக்கு படையெடுத்து வாரக்கணக்கில் தங்கி தமிழக பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற கடும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அது எதுவும் பலிக்காததால் கடந்த 4 மாதமாகவே கடும் அப்செட்டில் இருந்தார். இதனிடையே கொரோனா பரபரப்பு ஏற்பட்டதால் தனது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்து வந்த இவர் இப்போது மவுனம் கலைத்துள்ளார்.
முக்கியத்துவம் இல்லை
தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், பாஜகவில் மன வருத்தத்தில் இருக்கிறேன் என்றும், நம்பிக்கையோடு பாஜகவுக்கு வந்தவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். தலைமை மீது தமக்கு மன வருத்தம் இருந்தாலும் கட்சி மாறப்போவதில்லை எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். இவரது இந்தக் கருத்து பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஏதோ ஒரு முடிவு
அண்மையில் நெல்லையில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கே சென்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சமாதானம் செய்ததோடு அவருக்கு முக்கியமான சில வாக்குறுதிகளையும் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது சிரித்த முகத்துடன் பேசி, விருந்து வைத்து எல்.முருகனை வழியனுப்பிய நயினார், இன்று வெளிப்பட்ட இந்த கருத்து அவர் ஏதோ ஒரு முடிவில் இருப்பதையே காட்டுகிறது. இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக நயினார் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.