மாற்றம் ஒன்றே மாறாதது! 2016ல் நாங்குநேரியில் அப்படி ஒரு வெற்றி பெற்ற காங்.கின் இன்றைய பரிதாப நிலை!
திருநெல்வேலி: 2016ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமார் 17 ஆயிரம்வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தினார். ஆனால் இப்போது 2019 தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை சுமார் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
மூன்றே வருடங்களில் நாங்குநேரியில் அதிமுகவின் வாக்குகள் 57 ஆயிரத்தில் இருந்து 94 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். 2016ம் ஆண்டு வாக்கு சதவீதத்தை இப்போது பார்ப்போம்.
கிருஷ்ணசாமி வைத்த செக்.. அமைச்சர் ராஜலட்சுமியை வைத்து தகர்த்து.. நாங்குநேரியில் கரையேறிய அதிமுக!
அதிமுக தனித்து போட்டி
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக தனித்தே சந்தித்து. இதேபோல் திமுக காங்கிரஸ் ஒரு அணியாகவும், பாமக ஒரு அணியாகவும், தேமுதிக தலைமையில் விசிக, மதிமுக, தமாகா மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும் போட்டியிட்டன.
வசந்தகுமார் வெற்றி
இதில் நாங்குநேரி தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹெச் வசந்தகுமார் 74 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 57 ஆயிரத்து 617வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அனைத்து இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் போட்டியிட்ட சுரேஷ் 14 ஆயிரத்து 203 வாக்குகளும், தேதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயபாலன் 9 ஆயிரத்து 446 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட மணிகண்டன் 6609 வாக்குகளும் பெற்றனர்.
43.45 சதவீதம்
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஹெச் வசந்தகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயகுமாரை விட 17 ஆயிரத்து 315 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 43.45 சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தது.அதிமுக 33.41 சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தது.
காங்கிரஸ் தோல்வி
இப்போது அப்படியே 2019ம் ஆண்டு அதாவது இப்போது நாங்குநேரியில் நடந்த இடைத்தேர்தலை பார்த்தோமானால் அதிமுக வேட்பாளராக களம் இறங்கிய ரெட்டியார்பட்டி வி நாராயணன் 94 ஆயிரத்து 562 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய ரூபி மனோகரன் 62 ஆயிரத்து 229 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் 32 ஆயிரத்து 333 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
களப்பணி காரணம்
இந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப்போக முக்கிய காரணம் அதிமுகவின் மிகப்பெரிய களப்பணி. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை விட அதிகமாக வேலை பார்த்திருக்கிறது. கடந்தமுறை எதிரணியில் இருந்த தேமுதிக மற்றும் பாஜகவின் வாக்குகள் இந்தமுறை அதிமுகவுக்கு கிடைத்துள்ளதும் நாங்குநேரியில் அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.