களத்துக்கு வந்த ராக்கெட் ராஜா.. நாங்குநேரியில் திமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பெரும் சவால்
நெல்லை: நாங்குநேரியில் போட்டியிடப்போவது திமுகவா, அல்லது காங்கிரசா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், மொத்தத்தில் திமுக கூட்டணிக்கு, பெரும் சவால் காத்திருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது.
இதற்கு காரணம், பனங்காட்டுப்படை கட்சி. ஆம், களத்திற்கு வந்துள்ள ராக்கெட் ராஜாவால் சூடேறிக்கிடக்கிறது நாங்குநேரி தொகுதி.
காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது.
நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு, எம்.பி.யாகி விட்டதால் அந்த தொகுதி காலியானது. விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி காலமானதால் அந்த தொகுதி காலி இடமாக உள்ளது. காலியாக உள்ள இந்த 2 தொகுதிகளிலும் திமுக போட்டியிட திட்டமிட்டு வருகிறது.
காங்கிரசா, திமுகவா
இதில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளது என்பதால் அந்த தொகுதியை திமுகவுக்கு விட்டுத்தர காங்கிரஸ் தயங்குகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
கடும் போட்டி
இந்த நிலையில், நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவோ அல்லது காங்கிரசோ எந்த கட்சியாக இருந்தாலும், அதற்கு கடும் போட்டி உறுதியாகிவிட்டது. இதற்கு காரணம், களத்திற்கு வந்துள்ள பனங்காட்டுப்படை கட்சிதான். நாங்குநேரி தொகுதிக்கு பக்கத்து தொகுதியான ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட, ஆனைகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. நாடார் சமூகத்தில் மிகவும் பிரலமான புள்ளியாக உள்ளார் ராக்கெட் ராஜா.
வெங்கடேச பண்ணையார் சகோதரர் சுபாஷ் பண்ணையாருடன் மிகவும் நெருக்கமானவர் ராக்கெட் ராஜா.
ராக்கெட் ராஜா
ராக்கெட் ராஜா சமீபத்தில் பனங்காட்டுப்படை என்ற கட்சியை தொடங்கினார். நாடார் சமூகத்தின் மற்றொரு பிரபல புள்ளி ஹரிநாடார் இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்த நிலையில்தான், செய்தியாளர்களிடம் பேசிய ராக்கெட் ராஜா, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளராக தன் கட்சியின் சார்பில் ஹரிநாடார் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.
கள நிலவரம்
இந்த கட்சி எப்படி திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். நாங்குநேரி தொகுதியில் பெருவாரியாக உள்ளது நாடார் ஜாதியினர்தான். காங்கிரசோ அல்லது, திமுக கண்டிப்பாக நாடார் வேட்பாளரைத்தான் களமிறக்கும் என்பதே எதிர்பார்ப்பு. ராக்கெட் ராஜா நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். ஹரிநாடாரும், நெல்லை மாவட்டத்தின் தேவர்குளம் அருகில் உள்ள மேல இலந்தைகுளத்தை சேர்ந்தவர். எனவே, களத்தில் நிலவும் செல்வாக்கு காரணமாக, பனங்காட்டுப்படை கணிசமான நாடார் ஓட்டுக்களை தங்கள் பக்கம் இழுத்துவிடும் வாய்ப்பு உள்ளது.
ஜாதி கணக்கு
அதேநேரம், நாடார்களை தொடர்ந்து, நாங்குநேரி தொகுதியில் அதிக எண்ணிக்கையில் இருப்பது முக்குலத்தோர். கணிசமாக பிள்ளைமார், யாதவர்கள், தலித்துகளும் உள்ளனர். எனவே, அதிமுக தரப்பில், நாடார் தவிர்த்து வேறு ஒரு ஜாதிக்காரரை வேட்பாளராக நிறுத்தினால், மற்ற ஜாதி ஓட்டுக்கள் அந்த பக்கம் போக வாய்ப்பு உண்டு. ஆனால் நாடார் ஓட்டுக்கள் இரண்டாக பிரியும் வாய்ப்பு இருப்பதால் திமுக கூட்டணிக்கு சிக்கல் ஏற்படும். ஒருவேளை காங்கிரசுக்கு இந்த தொகுதியை கொடுக்காமல் திமுகவே போட்டியிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். காங்கிரஸ் கட்சி அதிருப்தி காரணமாக களத்தில் வேலை செய்யாது. எனவே, தொகுதியிலுள்ள நாடார்களில் பெரும்பாலானோர் சாய்சாக பனங்காட்டுப்படை மாறும். இது திமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.