ரெட்டியார்பட்டி நாராயணன் பின்னணி என்ன.. இவருக்கு சீட் கிடைத்தது எப்படி?
Recommended Video
சென்னை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனோஜ்பாண்டியன் போன்றோர் எல்லாம் வாய்ப்பு கேட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் புதுமுகத்திற்கு வாய்ப்பு தந்துள்ளது அதிமுக தலைமை.
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரெட்டியார்பட்டி நாராயணன் கடந்த 1986-ம் முதல் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். 1991-ல் ரெட்டியார்பட்டி கிளைக்கழக செயலாளராக கட்சி பொறுப்புக்கு வந்த அவர், இப்போது நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளராக இருக்கிறார்.
எஸ்.எஸ்.எல்.சி.வரை மட்டுமே படித்துள்ள இவர், கட்சியில் படிபடியாக வளர்ந்து இன்று எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிடும் அளவுக்கு தனது தகுதிகளை வளர்த்துக்கொண்டவர்.
அதிமுக அதிரடி.. நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
தலைவர்
1996-ம் ஆண்டு ரெட்டியார்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும், பின்னர் தலைவராகவும் பதவி வகித்தார் நாராயணன். 2004, 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினராக இருந்திருக்கிறார்.
நன் மதிப்பு
ரெட்டியார்பட்டி நாராயணனின் கட்சி செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் அறிந்துகொண்ட ஜெயலலிதா, 2011-ல் அவருக்கு நெல்லை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பதவியை அளித்தார். மேலும், எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாவட்ட இணைச்செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இ.பி.எஸ்.ஆதரவு
2017-ல் அதிமுகவில் நடந்த தர்மயுத்தத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தவர் இந்த ரெட்டியார்பட்டி நாராயணன். ஓ.பி.எஸ். அணிக்கோ, டிடிவி அணிக்கோ அவர் தாவாமல் தொடர்ந்து எடப்பாடியாருடன் இருந்தார். தர்மயுத்தத்தின் போது ஓ.பி.எஸ்.க்கு உறுதுணையாக இருந்த மனோஜ்பாண்டியனும் நாங்குநேரியில் வாய்ப்பு கேட்டு நேர்காணலில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு ஓ.பன்னீர்செல்வத்தால் வாய்ப்பு தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர்
ரெட்டியார்பட்டி நாராயணனின் மனைவி பவளசெல்வி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக (எஸ்.ஐ.)இருக்கிறார். நாராயணனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். மூத்தமகள் பொறியியல் கல்லூரியிலும், இளையமகளும், மகனும் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
ரியல் எஸ்டேட்
ப்ரியம் லேண்ட் புரோமோட்டர்ஸ் என்ற பெயரில் நில விற்பனை (ரியல் எஸ்டேட்) தொழில் செய்து வருகிறார் ரெட்டியார்பட்டி நாராயணன். பணத்திற்கு பஞ்சமில்லாதவர், தொகுதியில் அதிகம் வசிக்கும் இந்து நாடார் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கூட்டிக்கழித்துப் பார்த்து இவரை டிக் அடித்துள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.