தினமும் ஒரு புதுச்சட்டை... பிரச்சாரத்தில் கலக்கும் ரூபி மனோகரன்
சென்னை: நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரூபி மனோகரன் தினமும் ஒரு புதுச்சட்டை அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறாராம்.
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் ரூபி மனோகரன் சென்னையை சேர்ந்தவர். கன்னியாகுமரியை பூர்வீகமாக கொண்ட அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் அங்கு போட்டியிட வாய்ப்பு எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு காங்கிரஸ் தலைமை சீட் தரவில்லை. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து களம் கண்டுள்ளார்.
கட்டுமான தொழில்நிறுவனம் நடத்தி வரும் ரூபி மனோகரனிடம் கோட் சூட்களும், கலர் சட்டைகளும் தான் அதிகம் இருக்கிறதாம். வெள்ளைச் சட்டைகள் போதுமான அளவு இல்லாததால், கலர்சட்டைகளை அணிந்து வாக்கு கேட்க செல்லும் முடிவில் இருந்தாராம். கலர் சட்டைகளையோ, கோட் சூட்டுகளையோ பிரச்சாரத்திற்கு அணிந்து வந்தால் அது நன்றாக இருக்காது, மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தாது என லோக்கல் காங்கிரஸ் நிர்வாகிகள் எடுத்துக்கூறியுள்ளார்கள்.
இதையடுத்து சென்னையில் இருந்து மொத்தமாக புது வெள்ளைச்சட்டைகளை வாங்கி தேர்தல் முடியும் வரை தினமும் அணிந்துகொள்ளும் வகையில் அவரது குடும்பத்தினர் நாங்குநேரிக்கு அனுப்பி வைத்தார்களாம். இதனால் பிரச்சாரத்திற்கு புது புது வெள்ளைச்சட்டைகளை தான் அணிந்து செல்கிறாராம்.
இது குறித்து நம்மிடம் பேசிய நிர்வாகி, வேட்பாளரை பொறுத்தவரை பணக்காரராக இருந்தால் கூட எங்களிடம் எல்லாம் எளிமையாக தான் பழகுகிறார், பேசுகிறார். அவர் புது சட்டைகளை அணிவதை யாரும் இங்கு தவறாக நினைக்கவில்லை. நீங்களும் அதை பெரிதுபடுத்த தேவையில்லை என்கிறார்.