நாங்குநேரி.. விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்.. பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு
திருநெல்வேலி: நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி, மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள கமாராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு அக்டாபர் 21ம் தேதி (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையடுத்து நாளை (21ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை வாக்களிக்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், திமுக சார்பில் நா.புகழேந்தி, நாம் தமிழர் சார்பில் கந்தசாமி உள்பட 12 பேர் களத்தில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ நாராயணன் உள்பட 23 பேர் களத்தில் உள்ளார்கள்..
மகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- முழு வீச்சில் ஏற்பாடுகள்!
தலைவர்கள் வாக்கு சேகரிப்பு
இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வாக்கு சேகரித்தனர். இதேபோல் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட பலர் வாக்கு சேகரித்தனர்.
110 வாக்குசாவடிகள்
இந்நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஒய்ந்தது. நாங்குநேரியில் 2லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 170 இடங்களில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 110 வாக்குசாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
விக்கிரவாண்டியில் 2லட்சத்து 23 ஆயிரத்து 456 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 50 மையங்கள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு மையத்திலும் பயன்படுத்தப்பட உள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் 3286 பேரும், நாங்குநேரியில் 1475 பேரும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தீவிர பாதுகாப்பு
வெளியூர் ஆட்கள் நேற்று மாலையே வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் 6 கம்பெணி துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அனைத்தும் வெப் கேமரா மற்றும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு முடிந்த உடன் மாலையில் வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுசெல்லப்படும். வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.