மீனவர்களை மீட்க ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தளம்.. அமைச்சரிடம் எம்எல்ஏ இன்பதுரை கோரிக்கை
நெல்லை: புயல் மழை காலங்களில் காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கு வசதியாக தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தை ராதாபுரம் தொகுதியில் அமைக்க வேண்டும் என்று, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பேசும்போது..
புயல் மழை காலங்களில் கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடுவதற்கு வசதியாக தேசிய பேரிடர் மீட்பு படை தளம் ஒன்றை ராதாபுரம் தொகுதியில் அமைக்க வேண்டும்.
புயல் மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் புகுந்து அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள கடற்கரை கிராமங்களாக இடிந்தகரை, கூத்தங்குழி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், காடுதுலா, தில்லைவனம்தோப்பு மற்றும் விஜயாபதி கிராமங்கள் உள்ளன.
விஜயாபதி சாலையின் குறுக்கே செல்லும் காட்டாற்று வெள்ளம் காரணமாக தனித்தீவாகி அப்பகுதி மக்களை மீட்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால் விஜயாபதி அருகே காட்டாற்றின் குறுக்கே புதிய பாலம் ஒன்றை அமைத்து தர வேண்டும். ராதாபுரம் தொகுதி மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்குவது போன்று செயற்கைக்கோள் தொலைபேசி (சாட்டிலைட் போன்)வழங்கிட வேண்டும்.
கன்னங்குளத்தை ஒட்டிய பெருமாள்புரம் பகுதி ஒவ்வொரு புயல் மழை காலங்களிலும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை தடுக்க அங்கு வெள்ள தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும், ஆகிய மேற்கண்ட நான்கு கோரிக்கைகளையும் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிறைவேற்றித்தர வேண்டும் என இன்பதுரை எம்எல்ஏ வலியுறுத்தி பேசினார்.
புயல் காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிக்கப்படும் நிலையில், அமைச்சரிடம் இந்த கோரிக்கைகளை இன்பதுரை வலியுறுத்தினார்.