நெல்லையில் பெரும் பரபரப்பு.. முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர், பணிப்பெண் வெட்டி படுகொலை
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வெட்டி கொலை செய்யப்பட்டார்
Recommended Video
நெல்லை: திமுக முன்னாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி மிக கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார். உமா மகேஸ்வரியுடன் அவருடைய கணவர் மற்றும் பணிப்பெண் என மூன்று பேருமே கொல்லப்பட்ட சம்பவத்தினால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
1996-ம் ஆண்டு நெல்லை மேயராக பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி. நெல்லை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையும் கொண்டவர் உமா மகேஸ்வரி. அது மட்டுமில்லை.. சிறப்பாக செயல்பட்டதாக மறைந்த கருணாநிதியால் புகழப்பட்டவரும்கூட.
இந்நிலையில், ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள அவர் வீட்டில், இன்று மாலை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் புகுந்துள்ளனர். அங்கிருந்த மகேஸ்வரி, அவரது கணவரையும் சரமாரியாக வெட்டினர்.
வேலைக்கார பெண்
அவர்களை தடுக்க வந்த வீட்டு வேலைக்கார பெண்ணையும் கொடூரமாக வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பித்தும் விட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நிபுணர்கள்
இந்த பயங்கர கொலைக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. தகவலறிந்து மாவட்டத்தின் காவல்துறை அதிகாரிகளும் உமா மகேஸ்வரி வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்களை கொண்டு உமா மகேஸ்வரி வீடு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
உமா மகேஸ்வரி
விஷயம் வேகமாக பரவியதை அடுத்து திமுக பிரமுகர்களும், தொண்டர்களும் குவிய ஆரம்பித்து விட்டனர். இதனால் ஏராளமான போலீசார் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். உமா மகேஸ்வரிக்கு பெரிய அளவில் பகை இருப்பதாக தெரியவில்லை. காரணம் மிகவும் அமைதியானவர் அவர். நெல்லை மக்கள் அவரது நற் செயல்களை இன்னும் நினைவில் வைத்துள்ளனர்.
படுகொலை
முதல்கட்ட விசாரணையில் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும் உமா மகேஸ்வரிக்கு, சொத்துக்கள் நிறைய உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் படுகொலைக்கு காரணம், அரசியல் பகையா அல்லது சொத்து தகராறா என்பது போலீசார் விசாரணையில்தான் தெரியவரும். எனினும் அவரது படுகொலை நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக பிரமுகர் அதுவும் முன்னாள் பெண் மேயர் இவ்வளவு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தினால் நகரமே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.