இங்க பாருங்க எவ்ளோ ரத்தம்.. போலீஸ்காரங்க அடிச்சிட்டாங்க.. வைரலாகும் கண்டக்டர் வீடியோ
வழியும் ரத்தத்துடன் அரசு பஸ் கண்டக்டர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்
Recommended Video
நெல்லை: "இங்க பாருங்க எவ்ளோ ரத்தம்.. வாரண்ட் தான் கேட்டேன்.. போலீஸ்காரங்க என்னை இப்படி அடிச்சிட்டாங்க" என்று அரசு பஸ் கண்டக்டர் வழியும் ரத்தத்துடன் வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
நெல்லை புது பஸ் ஸ்டேண்ட்டில் குமுளியிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில், ஆயுதப்படைக் காவலர்களான தமிழரசன், மகேஷ் ஆகிய 2 பேரும் ஏறியுள்ளனர். இருவருமே யூனிபார்மில்தான் இருந்தனர்.
எனினும் கண்டக்டர் ரமேஷ், அவர்களிடம் டிக்கெட் எடுக்க சொன்னார். அதற்கு அவர்கள் இருவரும், "நாங்க எதுக்கு டிக்கெட் எடுக்கணும். எங்ககிட்ட இருக்கு.. அதனால டிக்கெட் எடுக்க மாட்டோம்" என்று சொல்லி உள்ளனர்.
இதையடுத்து வாக்குவாதம் தொடங்கி உள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீஸ்காரர்கள் இருவரும் கண்டக்டரை சரமாரியாக அடித்துவிட்டனர். மேலும் தகாத வார்த்தைகளிலும் கண்டக்டரை திட்டி உள்ளனர். இதை பஸ்ஸில் இருந்த பயணிகளே வீடியோ எடுத்து உள்ளனர். இதனிடையே, அடிவாங்கின கண்டக்டர் அந்த போலீஸ்காரர்களை திருப்பி அடிக்கவில்லை. பதிலாக வண்டியை ஸ்டேஷனுக்கு விட சொன்னார்.
யாரை டிக்கெட் எடுக்க சொல்றே.. கண்டக்டர் முகத்திலேயே குத்தி தாக்கிய 2 போலீஸார்.. பகீர் வீடியோ
பிறகு தன் செல்போனை எடுத்து ஓடும் பஸ்ஸிலேயே வழியும் ரத்தத்துடன் பேசி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் சொன்னதாவது: "ஐயா.. நான் போலீஸை வாரண்ட் கேட்டேன்.. எழுதி உடனே தாங்கன்னு கேட்டேன். அதுக்கு என்னை இந்த மாதிரி அடிச்சிட்டாங்க. இங்க பாருங்க, கண்ணுல, நெத்தியில இருந்து ரத்தம் வழியுது.. கேட்டதுக்கு, நான் போலீஸ்காரன், என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொல்றாங்க ஐயா" என்றார்.
கண்டக்டர் இந்த புகாரை, தன் உயரதிகாரிகளுக்கு சொல்கிறாரா, அல்லது போலீசாருக்கா? அல்லது பொதுமக்களுக்கா என தெரியவில்லை. ரத்தம் சொட்ட சொட்ட பேசும் கண்டக்டரின் இந்த வீடியோ மிக பெரிய அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.