பெரும் பயம்.. கொரோனா தாக்கியதால் மன உளைச்சல்.. இருட்டுக் கடை அல்வா அதிபர் தூக்கிட்டு தற்கொலை
நெல்லை: கொரோனா இருப்பது தெரிந்ததும் அதை ஜீரணிக்கவே முடியாத வேதனையிலும், கடுமையான மன அழுத்தத்திலும், ரூமிலேயே தூக்கு போட்டு தொங்கிவிட்டார் இருட்டுக்கடை அல்வா ஓனர் ஹரிசிங்.. இதனால் நெல்லை மாவட்ட மக்கள் கடுமையான அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Recommended Video
தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் பிரபலமானது நெல்லை இருட்டுக்கடை அல்வா... ஏன், உலக புகழ்பெற்றது என்றுகூட சொல்லலாம்.. நெல்லையப்பர் கோயில் எதிரே 1900-ம் ஆண்டு இந்த கடை தொடங்கப்பட்டது.. கிருஷ்ணசிங் என்பவர்தான் இந்த லாலா கடையை முதன்முதலில் தொடங்கினார்.
தினமும் சாயங்காலம் 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த கடையில் குண்டு பல்பு எரியும்.. அந்த பல்பு 40 வாட்ஸ் என்பதால், வெளிச்சம் குறைவாக இருக்கும்.. அதனால்தான் இருட்டுக்கடை அல்வா என்று பெயர் வந்தது. நெல்லையில் வழக்கமாகவே அல்வா ஃபேமஸ்.. இதில் ஹரிகேன் விளக்கை எரிய வைத்ததால், இந்த கடை கூடுதல் ஃபேமஸ்.
கொரோனா: வட சென்னையில் அணிவகுத்து வந்த கமாண்டோஸ்.. தெறித்து ஓடிய புள்ளீங்கோ!
அனுமதி
இவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்... இப்போது அவருடைய 3-ம் தலைமுறை வாரிசுகளால் இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த கடையின் ஓனர் பெயர் ஹரிசிங்.. இவருக்கு சிறுநீரகத்தில் தொற்று இருந்தது.. அதனால் சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருமகன்
இந்த சமயத்தில்தான், அவரது கொரோனா தொற்று ஏற்பட்டது.. அப்போது அவரது மருமகனுக்கும் டெஸ்ட் செய்தனர்.. அதாவது கடந்த 23-ம் தேதி ரத்த, சளி மாதிரிகள் டெஸ்ட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதில், கொரோனா தொற்று இருப்பது இன்று காலைதான் உறுதியானது. ஆனால் தனக்கு கொரோனா இருப்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. காலையில் இருந்து மன உளைச்சலில் இருந்து கொண்டிருந்தார்.
உடல் அடக்கம்
பிறகு இன்று பிற்பகலில் அந்த ரூமிலேயே ஹரிசிங் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதுதொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது... அரசு விதிமுறைகளுக்கு உட்பட அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
துப்புறவு பணிகள்
இதனிடையே, கடையில் உள்ளவர்களுக்கும் தொற்று இருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளதால், அதற்கான பரிசோதனைகள் முடுக்கவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே தொற்று உறுதியான மருமகனுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. ஹரிசிங் வசித்து வந்த டவுன் அம்மன் சன்னதி தெருவில் தீவிர துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் நெல்லை மாவட்ட மக்களை மட்டுமல்லாமல் அனைவரையுமே சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. .