நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை கோர்ட்
நெல்லை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது நெல்லை நீதிமன்றம்.
நெல்லையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் நெல்லை கண்ணன் பங்கேற்றார். அவர் தமக்கே உரிய நெல்லை பாணியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சித்து பேசியிருந்தார்.
இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் போலீசில் புகார் செய்தனர். இப்புகார்களின் அடிப்படையில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தாம் நெல்லை பாணியில் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மேலும் தமக்கு ஜாமீன் வழங்க கோரி நெல்லை நீதிமன்றத்திலும் அவர் மனுத் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நெல்லை நீதிமன்றம் இன்று நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது.