தமிழ் கடல் அலை ஓய்ந்தது..நெல்லை கண்ணன் உடல் தகனம்..இலக்கியவாதிகள் கண்ணீர் அஞ்சலி
திருநெல்வேலி: மறைந்த தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் உடல் இறுதி அஞ்சலிக்குப் பிறகு திருநெல்வேலி கருப்பன்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video
தமிழ் அறிஞரும், பேச்சாளரும், காங்கிரஸ் பிரமுகருமான நெல்லை கண்ணன், உடல் நலக்குறைவால் நெல்லையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77. பட்டிமன்றம், இலக்கிய நிகழ்ச்சிகள், ஆன்மிகம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் சிறந்த பேச்சாளராக திகழ்ந்தவர் நெல்லை கண்ணன், நகைச்சுவையாகவும், நெல்லை தமிழில் அற்புதமாகவும் பேசக் கூடியவர். குற்றால அருவியாய் அவரது நாவில் இருந்து தமிழ் கொட்டும். தனது பேச்சினால் பார்வையாளர்களை கட்டிப்போடும் வல்லமை படைத்தவர் நெல்லை கண்ணன்
தமிழ்க்கடல் என்றும், நெல்லையைச் சேர்ந்தவர் என்பதால் நெல்லை கண்ணன் என்றும் அழைக்கப்பட்டார். இவருக்கு தமிழக அரசின் 2021ம் ஆண்டின் இளங்கோவடிகள் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.
வயது முதிர்வால் திருநெல்வேலி டவுனில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து, சிகிச்சை பெற்று வந்தார் நெல்லை கண்ணன். இந்நிலையில் நேற்று மதியம் அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டது.
அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் நேரில் வந்து நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், கலெக்டர் விஷ்ணு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் கடல் நெல்லை கண்ணன் உடலுக்கு இறுதி அஞ்சலி.. அரசு மரியாதை வேண்டும்..வேல்முருகன் கோரிக்கை
நெல்லை கண்ணன் அவர்களின் மூத்த மகன் சுரேஷ் கண்ணன் என்ற சுகா திரைப்பட இயக்குநராகவும், மற்றொரு மகன் ஆறுமுகம் கண்ணன் சென்னையில் பணிபுரிந்தும் வருகின்றனர். இது தவிர 2 பெண், ஆண் வளர்ப்பு மகனும் உண்டு. நெல்லை கண்ணன் உடல் இறுதி அஞ்சலிக்குப் பிறகு திருநெல்வேலியில் உள்ள கருப்பன்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.