6 பேரால் சீரழித்து கொல்லப்பட்ட நெல்லை நர்ஸ்.. குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு.. பரபரப்பு தீர்ப்பு
நெல்லை: நெல்லையில் 12 வருடங்களுக்கு முன்பு நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 ஆண்டுகளுக்கு பிறகு 2 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிக்குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ் செல்வி(53) என்ற பெண் நர்ஸாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2008ம் ஆண்டு அம்பாசமுத்திரம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்த கும்பல் தமிழ் செல்வியிடம் இருந்து நகைகளையும் கொள்ளை அடித்து சென்றது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக நெல்லை கல்லிடைக்குறிச்சி போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்டது விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளிகள் . ராஜேஷ் கண்ணா மற்றும் வசந்த குமார் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது
இந்நிலையில் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி இந்திராணி இன்று தீர்ப்பை அறிவித்தார். இதன்படி ராஜேஷ் கண்ணா மற்றும் வசந்த குமார் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவருக்கும் சாகும் வரை தூக்கிலிடுமாறு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட எஞ்சிய 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நர்ஸ் கொல்லப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.