அமித் ஷா குறித்து பேச்சு.. நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு
நெல்லை: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடந்தது.
இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணனும் பங்கேற்றார்.
நெல்லை கண்ணன்
அந்த கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.
அமித்ஷா குறித்து
மேலும் அந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் ஓட்டுப்போட்டதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் கடுமையாக தாக்கி பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசுகையில் சோலியை முடிக்க வேண்டும் என்று நெல்லை பாஷையில் பேசியதாக பரபரப்பு வீடியோ ஒன்று வைரலானது.
பாஜக புகார்
இதற்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பல்வேறு காவல் நிலையங்களில் பாஜகவினர் புகார் அளித்தனர். இதையடுத்து நெல்லை கண்ணன் மீது 504 (பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வேண்டுமென்றே செயல்படுவது), 505 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 505(2) (இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
நெல்லை போலீஸ்
இந்நிலையில் முதல்வர், துணை முதல்வரை அவதூறாகப் பேசியதாக நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய கோரி அதிமுகவினரும் பாளையங்கோட்டை பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் ஜெனி தலைமையில் நெல்லை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்கள்.
நெல்லை கண்ணன் வீடு
இதனிடையே நெல்லை கண்ணனை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் நெல்லை கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.