வரம்பு மீறி போய்க்கிட்டு இருக்கு... காவல்நிலையம் முன்பு 'டிக் டாக்' செய்த நெல்லை இளைஞர் கைது
நெல்லை: நெல்லையில் காவல் நிலையம் முன் 'டிக்டாக்' செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வித, விதமாய் வித்தியாசமாய் பல்வேறு காட்களில் இளைய தலைமுறையினர் நடித்து, அதனை சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். இதற்கும் மேல் ஒரு படி தாண்டி, காவல்நிலையம் வரை சென்று டிக் டாக் செய்தவர்கள் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்தநிலையில், முக்கூடல் அருகே உள்ள சிவகாமிபுரத்தை சேர்ந்த ஜோதிமுருகன் என்ற கூலிதொழிலாளி, தனது சகோதர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்து, அங்கு சென்றுள்ளார். பின்னர் காவல் நிலையம் முன்பிருந்து டிக்டாக் செய்து, அதை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவ, காவல்துறையினர் ஜோதிமுருகனை கைது செய்தனர்.
உயிரை கொல்லும் விளையாட்டான புளூவேல் கேம் தடை செய்யப்பட்டது போன்று டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் சட்டசபையில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, டிக் டாக் மூலம் ஆபாச செயல்களும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாகவும், எனவே, கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த செயலியை கடுமையாக கண்காணிப்பது மற்றும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அதே போல், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
இதற்கிடையே, விதிமுறைகளை மீறி வீடியோ பதிவிட்டால் கணக்கில் இருந்து உடனடியாக நீக்கப்படும் என்று டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.