நெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. ரகசிய தகவல் கிடைத்ததாக தகவல்
Recommended Video
நெல்லை: நெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கத்தினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை ரகசிய தகவல் கொடுத்தது.
இதன் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) ஆங்காங்கே சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் கோவை, ராமநாதபுரம், மதுரை, மண்ணடி, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளியை சேர்ந்த திவான் முஜிபுர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
திவான் முஜிபுர், சில ஆண்டுகளுக்கு முன்னர் வளைகுடா நாட்டில் பணியாற்றியுள்ளது தெரியவந்தது. அவர் குறித்து சில ரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. அது போல் புளியங்குடியில் உள்ள மைதீனின் பெயிண்ட் கடையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.