என்னை யாரும் இயக்க முடியாது... என் தலைமையில் 3வது அணி அமையும் - கமல் திட்டவட்டம்
2021 சட்டசபைத் தேர்தலில் எனது தலைமையில் மூன்றாவது அணி கட்டாயம் அமையும் என்று மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். மக்கள் சக்தியை நம்பியே நாங்கள் களம் இறங்குகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி: அரசியலில் என்னை யாரும் இயக்கவில்லை, இயக்கவும் முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். எனது தலைமையில் மூன்றாவது அணி கட்டாயம் அமையும் எனவும் நல்லவர்களோடு இணைந்து மூன்றாவது அணி அமைப்போம் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் நான்காவது நாளாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் நெல்லை அன்பு நகர் தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களை சந்தித்து தலை நிமிரட்டும் தமிழகம் என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.
பல்வேறு ஊர்களுக்குச் சென்று மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து பல மீனவ கிராமங்களுக்குச் செல்லவிருக்கிறோம். இல்லத்தரசிகளுக்கு ஊதியத் திட்டம் என்ற புதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். விவசாயத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
லஞ்ச ஒழிப்பு
தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதார நிலைக்கு உயர்த்துவதே நோக்கம். ஊழலுக்கு வழியில்லா வெளிப்படையான டெண்டர்களை செய்தாலே இரண்டு தமிழகத்தை கட்டமைக்கலாம். மக்கள் நீதி மையம் ஆட்சிக்கு வந்தால், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் வெளிப்படையாக நடக்கும். லஞ்ச ஒழிப்பு மேல் மட்டத்தில் இருந்து தொடங்கி கீழ் மட்டம் வரையில் ஒழிக்கப்படும் என்று கூறினார்.
விவசாயத்தில் மாற்றம்
இளம் தொழில் முனைவோர்க்கு ஊக்குவிப்பை தருவோம். பன்முகத்தன்மை கல்வியிலும் இருக்க வேண்டும். சம்பளத்திற்கு வேலை வாங்கித்தரும் தொழிலாளிகளை உருவாக்குவதை விட, தொழில் செய்யும் முதலாளிகளாக மாற்றுவதே நோக்கம். விவசாயத்தில் பல மாற்றங்களை, புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
கமல் பேட்டி
செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் வரும் சட்டசபைத் தேர்தலில் எனது தலைமையில் மூன்றாவது அணி கட்டாயம் அமையும் எனவும் நல்லவர்களோடு இணைந்த மூன்றாவது அணி அமைப்போம் எனவும் தெரிவித்தார். ஓவைசியோடு கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார்.
மக்கள் சக்தி
சின்னம் வழங்கப்படாத விவகாரம் தொடர்பாக நான்கைந்து நாட்களில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் வரும் தேர்தலில் மக்கள் மாற்றத்தை நிகழ்த்துவார்கள் மக்கள் சக்தியை நம்பியே நாங்கள் களம் இறங்குகிறோம் என்றும் கூறினார்.
ஆன்மீகமும் ஒரு அங்கம்
எங்கள் கட்சி யாருக்கும் பி.டீம் அல்ல. நாங்கள் எப்போதும் நாங்கள் தான் ஏ டீம் என்றார். மக்களிடத்தில் ஆன்மிகம் இருக்கிறது என்றால் அதுவும் என் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் அது எனக்கு தேவையா இல்லையா என்பது என்னுடைய பிரச்சினை. நான் தான் முடிவு செய்ய வேண்டும்.
அரசியலும் சினிமாவும்
ஒருவர் நேர்மையான நபராக இருந்தால் அவர்களை நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம். நேர்மையே முதல் தகுதி. நான் எனக்குத் தோன்றியதை, மக்களுக்கு நல்லது என்று தோன்றியதை தான் சினிமாவில் செய்தேன். அதேபோல தான் அரசியலிலும் செய்வேன். அரசியலில் என்னை யாரும் இயக்கவில்லை, யாராலும் இயக்கவும் முடியாது.
திமுக உடன் கூட்டணி
திமுகவுடன் உங்கள் கட்சி கூட்டணி அமைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், கூட்டணி குறித்து பேசுவதற்கான தருணம் இதுவல்ல என்றும் கூட்டணி குறித்து முடிவு செய்தால் கண்டிப்பாக வெளிப்படையாக அறிவிப்போம் என்றார்.
தேர்தலில் போட்டி
சட்டசபைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று மனசாட்சி படி நான் ஒரு சட்டமன்ற தொகுதியில் தான் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இலவசமாக வழங்குவது உள்ளிட்டவைகள் இடம் பெறும் எனவும் கூறினார்.