ஓய்வூதியத்தில் முறைகேடு.. வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்த முதியோர்கள்
திருநெல்வேலி: நெல்லை அருகே இலஞ்சி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதியோருக்கான ஓய்வூதியத்தை வழங்குவதில் தாமதம் செய்ததைக் கண்டித்து முதியோர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பார்டர், வல்லம், கொட்டாகுளம், இலஞ்சி, வாஞ்சிநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கணக்குகள் வைத்து வரவு, செலவு செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள முதியவர்களுக்கு தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை திட்டம் மாதம் 1,000 ரூபாய் இந்த வங்கியின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி நபர் ஒருவர் நியமிக்கப்பட்டு இந்த வங்கியின் கண்காணிப்பில் அவர்களுக்கு பணம் வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த வங்கியிலிருந்து பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் சேவையில் ஈடுபட்டுள்ள நபர் முறையான முறையில் பணத்தை பட்டுவாடா செய்வதில்லை என்றும் முறைகேடுகள் நடப்பதாகவும் புகார் எழுந்தது.
இன்று இலஞ்சியிலுள்ள உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பிரானுர் பார்டர் கிராமத்தை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட முதியோர்கள் முற்றுகையிட்டு தங்களுடைய பணம் முறையாக வழங்கப்படவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர். தமிழக அரசு ஏழை.எளிய முதியவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவை உள்ளிட்டவர்களுக்கு வழங்கும் மாத உதவித்தொகையை முறையாக வழங்கவேண்டும். அதில் முறைகேடுநடக்காத வண்ணம் கண்காணிப்பில் அரசு ஈடுப்பட வேண்டும்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடந்துவருவது குறித்து அரசும் வங்கிகளும் கண்காணித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.