வங்கித் தேர்வில் குளறுபடி. சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு! ஏமாற்றம்!
நெல்லை: வங்கித் தேர்வில் நடைபெற்ற குளறுபடியால் சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திடியூர் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் இன்று வங்கிப் பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்க நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர்.
தேர்வு எழுத வந்த மாணவர்களில் சுமார் 50 பேரின் கையெழுத்து கணினியில் வரவில்லை என்று கூறி அவர்களுக்குத் தேர்வு எழுத மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.
மாணவ, மாணவிகள் எவ்வளவோ கெஞ்சியும் தேர்வு நிலைய அலுவலர்கள் மாணவ மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
ஹால் டிக்கெட்டில் கையெழுத்து இருந்தபோதும் கணினியில் கையெழுத்து பதிவாகவில்லை என்று கூறி அனுமதி மறுத்ததால் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியானதாக அனுமதி மறுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கவலையுடன் தெரிவித்தனர்.