76 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவை சந்தித்த பாபநாசம் அணை.. மீன்கள் செத்து மிதப்பதால் அதிர்ச்சி!
Recommended Video
நெல்லை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 76 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் 9 அடியாகக் குறைந்து காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு பருவ மழை பெய்யாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் ஏற்கனவே பல அடிக்கு கீழே சென்றுவிட்டது.
இந்நிலையில் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.
தமிழக மக்களை தன் பக்கம் இழுக்க பாஜக விரும்பினால்.. இதையெல்லாம் செஞ்சாகணும்!
வரலாறு காணாத சரிவு
அணை கட்டியதிலிருந்து 76 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு கடந்த இரண்டு வாரங்களாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. கோடை மழை பொய்த்ததால் நீர்வரத்து இன்றி வறண்டு போனது.
மேற்கு தொடர்ச்சி மலை
இதனால் பிசான சாகுபடி தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.தென் தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது தாமிரவருணி நதியாகும். தாமிரவருணியின் குறுக்கே மேற்குத் தொடர்சி மலையில் பாபநாசத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு தென் தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக உள்ளது.
5500 மிக.அடி கொள்ளளவு
143 அடி உயரத்துடன் 5500 மி,க.அடி நீர் கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு 1943 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த அணைக்கட்டு மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் தாமிரவருணி நதியில் பல்வேறு இடங்களில் உறைகிணறுகள் அமைத்து அதன்மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது மீண்டும்
பருவமழை பொய்த்ததையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவாக 13.65 அடியாக ஆனது. இந்நிலையில் நிகழாண்டு போதிய அளவு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை பெய்யாததால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் போதிய மழையின்றி அணைகளுக்கு நீர் வரத்துக் குறைந்தது. இதையடுத்து அணையிலிருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்குத் தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்பட்டதால் நீர்மட்டம் வேகமாகக் குறைந்தது.
9 அடியாக குறைவு
இதையடுத்து அணையின் நீர்மட்டம் அணையின் வரலாற்றில் முதன்முறையாக அதிகபட்சமாக குறைந்து 9 அடியாக ஆனது. மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்த நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கோடை மழை பெய்யாமல் பொய்த்ததால் அணைகளுக்கு நீர்வரத்து முழுவதுமாக குறைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி மழை பொழிவு வரும் வரை அணையில் நீர் வரத்துக்கு வழியில்லாததால் அணையின் நீர் மட்டம் உயர வழியில்லை.
விவசாயிகள் அதிர்ச்சி
வரலாறு காணாத வகையில் அணையின் நீர்மட்டம் குறைந்தும் 10 நாள்களுக்கும் மேல் அணை வறண்டு காணப்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். பருவமழையை நம்பி இருக்கும் நிலையில் பருவ மழை தாமதமாகும் என்று வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து தாமதாமகி அணையின் நீர்மட்டம் உயர்வதும் தாமதமாகும் நிலை உள்ளதால் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலைஉள்ளது.
செத்து மிதக்கும் மீன்கள்
அணையில் நீர் வறண்டு போனதால் அணையில் உள்ள மீன்கள் தண்ணீரின்றி செத்து மிதந்து வருகின்றன. மேலும் அணையில் உள்ள முதலைகள் உணவின்றி தவிக்கும் நிலையும் உள்ளது.