விவசாய நிலங்களை காவு வாங்கும் 4 வழிச்சாலை.. கடையநல்லூரில் விவசாயிகள் மறியல்
Recommended Video
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் திருமங்கலத்திலிருந்து, கொல்லம் வரை நான்கு வழிச்சாலை அமையவுள்ளது.இந்த திட்டத்திற்காக மக்களிடமிருந்து விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை தாலுகா,கடையநல்லூர் தாலுகா, வாசுதேவநல்லூர், சிவகிரி, புளியங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் சுமார் 2500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுவதாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதிர்ப்பு ஒரு புறம் இருக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நின்றபாடில்லை. விவசாயிகள் பொன்னு வெளையற பூமியை இப்படி பன்றீங்களேயான்னு கூப்பாடு போட்டு கண்ணீர் விடுவது வேதனை தருவதாக இருக்கிறது.
பல்வேறு முறை நெல்லை மாவட்ட ஆட்சியரிடமும் மனுக்கொடுத்து முற்றுகையிட்டு வந்தனர். இந்த நிலையில் செங்கோட்டையிலுள்ள நிலமெடுப்பு அலுவலகத்திலும் எதிர்ப்புத்தெரிவித்து மனு அளித்தனர். விவசாயிகள் என்ன போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்காது என்று தெரிந்தும் போராட்டம் நடத்துவது வேதனை. அதைத் தவிர அவர்களுக்கு மாற்றுவழி எதுவும் இல்லை என்றாலும், 4 வழி சாலை அமைக்க அரசுக்கும் மாற்று வழி கிடைக்கவில்லை.
இன்று கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்புக் கூட்டம் மாவட்ட நிலமெடுப்பு வருவாய் அலுவலர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
இதில் பொது மக்கள் , விவசாயிகள் அரசியல் கட்சியினர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். இது குறித்து மக்கள் கூறுகையில் அமைய இருக்கும் நான்கு வழிச்சாலையை மாற்று வழித்தடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.