ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு மோடி தான் மூல காரணம்.. ஓபிஎஸ் பிரச்சாரம்
தென்காசி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு மூல காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி தான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தென்காசி தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமியை ஆதரித்து ராஜபாளையத்தில் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், யாருடைய கூட்டணி ஆட்சியில், தமிழக மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்தபோது எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையான காவிரி நதி நீரின் உரிமையை விட்டுக் கொடுத்தவர்கள் தி.மு.க.வினர் என்றார்.
அதிமுக அரசில் பெண் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
திமுக ஆட்சியில் அல்ல... அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு நுழைந்துவிட்டது... ஸ்டாலின் பிரச்சாரம்
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாகவும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை இருந்ததாகவும் விமர்சனம் செய்தார். மேலும், 15 லட்சம் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்படுள்ளது என்றும் அவை அனைத்தும் கான்கீரிட் வீடுகளாக மாற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செய்யாமல் கிடப்பில் போட்டதாகவும், ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செய்திருப்பதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். மேலும், ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது எனவும் கூறினார்.