நாக்பூர் டூ பிதார்... நடந்தே வந்த ஆலங்குளம் தொகுதிவாசி... ஊருக்கு அழைத்து வந்த பூங்கோதை ஆலடி அருணா
தென்காசி: மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பிதார் வரை நடந்தே வந்த தமிழகத்தை சேர்ந்த 17 நபர்களை திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா பாதுகாப்பாக மீட்டு அவர்களது சொந்த ஊரில் சேர்த்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக வேலையும், வருமானமும் இல்லாததால் நாக்பூரில் இருந்து தமிழகத்திற்கு நடந்தே சென்றுவிடலாம் என எண்ணி 17 பேர் மார்ச் மாத இறுதியில் புறப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களால் கர்நாடக மாநிலம் பிதார் வரை தான் நடக்க முடிந்தது. அதற்கு மேல் அவர்களது உடல் ஒத்துழைக்காததால் அங்குள்ள அரசு அதிகாரிகளிடம் விவரத்தை கூறி அங்கு தங்கியுள்ளனர்.
கையில் பணம் இல்லை.. இ பாஸ்க்கு விண்ணப்பித்தும் பதில் இல்லை.. அவுரங்காபாத் தொழிலாளி கண்ணீர் பேட்டி
ஆலங்குளம் தொகுதி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிகுட்பட்ட கழனீர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மாஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பணியாற்றி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல பல வழிகளில் முயன்றுள்ளார். ஆனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் தமிழகத்திற்கு நடந்தே செல்வது என செல்வராஜ் உட்பட அவருடன் பணியாற்றிய 17 பேரும் முடிவெடுத்து நடையை கட்டியுள்ளனர். நாக்பூரில் இருந்து பிதார் வரை சுமார் 500 கி.மீ. நடந்து வந்த அவர்களால் அதற்கு மேல் நடப்பதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை.
தங்க வைப்பு
இதனிடையே பிதார் மாவட்ட நிர்வாகத்திடம் தங்கள் விவரத்தை கூறிய செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சொந்த ஊர் செல்ல உதவி செய்யுமாறு கோரியுள்ளனர். ஆனால் அப்போது தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்ல அனுமதி இல்லாததால் பிதாரில் உள்ள முகாம் ஒன்றில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சப் கலெக்டராக கோவையை சேர்ந்த அக்ஷய் ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ்.இருப்பதால் இவர்களுக்கு தேவையான உணவு வசதிகளை அவர் ஏற்படுத்திக்கொடுத்ததுடன் மனிதநேயத்துடன் பல உதவிகளையும் செய்துள்ளார் .
சொந்த ஊருக்கு
இதனிடையே 20 நாட்களுக்கும் மேலாக பிதாரில் தங்கியிருந்த செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லலாம் என மத்திய அரசு அனுமதி தந்தவுடன், மீண்டும் தமிழகத்திற்கு செல்ல புறப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் எளிதாக அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இதையடுத்து தனது தொகுதி எம்.எல்.ஏ.வானா பூங்கோதை ஆலடி அருணாவை தொடர்பு கொண்ட செல்வராஜ், நடந்த அனைத்து விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு தைரியமூட்டிய பூங்கோதை தனது தொகுதிக்காரர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 17 பேரை சொந்த ஊரில் சேர்க்கும் முயற்சியில் இறங்கினார்.
தனிப்பேருந்து
பிதார் மாவட்ட சப் கலெக்டர் அக்ஷய் ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ்.ஸை தொடர்புகொண்டு பேசிய பூங்கோதை அந்த 17 பேரையும் ஊர் அனுப்பி வைப்பதற்கான பேருந்து செலவை அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்படி ஒரு தேவை இருக்காது எனக் கூறிய அக்ஷய் ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ். , தமிழகத்தை சேர்ந்த 17 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான பேப்பர் ஒர்க்கை மளமளவென முடித்து தனிப்பேருந்து மூலம் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி வரை அனுப்பி வைத்தார்.
ரூ.1500 வசூல்
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அவர்கள் அனைவருக்கும் சோதனை செய்து அவர்களை தனிப்பேருந்துகளில் தென்காசி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு என அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அவர்களிடம் இருந்து டீசல் செலவுக்காக ரூ.1500 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த பூங்கோதை ஆலடி அருணா கிருஷ்ணகிரி வட்டாட்சியரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க, அடுத்த நாளே அந்த 17 பேரின் வங்கிக் கணக்குகளிலும் வசூலித்த கட்டணத் தொகையான ரூ.1500 செலுத்தப்பட்டுள்ளது.