ஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி.! கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்
Recommended Video
நெல்லை: தயிருக்கு ஜிஎஸ்டி வரி வசூலித்த ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகிலுள்ள அன்னபூர்ணா உணவகத்தில், நெல்லையை சேர்ந்த மகாராஜன் 40 ரூபாய்க்கு கடந்த பிப்ரவரி மாதம் தயிர் வாங்கியுள்ளார். இதற்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியாக ரூ.2 மற்றும் தயிர் பார்சல் செய்து வழங்க ரூ.2 என மொத்தம் ரூ.44 அவரிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.
தயிர், பச்சைப்பால், பச்சை மாமிசம், காய்கறி உள்ளிட்ட உணவுபொருட்கள் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் வராது என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தயிருக்கு ரூ.2 ஜிஎஸ்டி வரி வசூலித்ததால் அதிர்ச்சியடைந்த மகாராஜன், தயிருக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் பில்லில் ஜிஎஸ்டி போட்டுள்ளீர்கள் அரசு உத்தரவை மீறி தயிருக்கு ஜிஎஸ்டி வசூலிக்ககூடாது என மகராஜன் உணவக நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் ஜிஎஸ்டி மற்றும் பார்சல் சார்ஜ் சேர்த்துதான் பில் கொடுப்போம் இஷ்டமிருந்தால் வாங்கு. இல்லையென்றால் நடையைகட்டு என ஓட்டல் நிர்வாகத்தினர் கடுமையாக கூறியுள்ளனர்.
இருப்பினும் ரூ.44 செலுத்தி தயிர் பார்சல் பாக்கெட்டை வாங்கிய மகாராஜன் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானார். நுகர்வோரை கிள்ளுக்கீரையாக என்னும் உணவகத்தை, ஒரு கை பார்ப்பதே சரி என முடிவெடுத்த மகாராஜன் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சேட்டா.. எந்தா இது.. கோர்ட்டுக்குப் போகாமல்.. கேரளத்து கலகல போலீஸ் டிக்டாக்!
வழக்கை விசாரித்த நீதிமன்றம் உணவக நிர்வாகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்தது. மேலும் வழக்கு செலவிற்காக ரூ.5,000 மனுதாரருக்கு ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், தவறினால் கூடவே 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பேசிய மகாராஜன் தரப்பு வழக்கறிஞர் தயிருக்கு ஜிஎஸ்டி என்ற பெயரில் கட்டணம் வசூலித்திருப்பதும் பார்சல் சார்ஜ் என்ற பெயரில் கட்டணம் வசூலித்திருப்பதும் முறையற்ற வாணிபம், சேவை குறைபாடு என குறிப்பிட்டார்.
எனவே வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயிருக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.4 சேர்த்து, மொத்தம் 15,004 ரூபாயை மனுதாரருக்கு ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.