தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2 ஆண்டுகள் தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் காலமானார்
நெல்லை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2 ஆண்டுகள் தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் நெல்லையில் காலமானார்.
இது தொடர்பாக புலவர் செந்தலை கவுதமன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தென்காசி - கடையம் நகர இல்லத்தில் பேராசிரியர் அறிவரசனார், புதன்கிழமை இரவு 7.00மணிக்கு மீளா விடைபெற்றார். ஆழ்வார்குறிச்சிக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி 1996இல் ஓய்வு பெற்றவர். இயற்பெயர் குமாரசாமி.
ஈழம் சென்று போர்ச்சூழலுக்கு நடுவே ஈராண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றித் தமிழாசிரியர் பலரை உருவாக்கி மீண்டவர் ; தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதனிக்கும் ஆசிரியர். தேசியத் தலைவர் அணிவித்த மோதிரம் அவர் விரலில்! தமிழீழத்தாகம் நெஞ்சில்!
ஈழத்தில் வாழ்ந்த நினைவுகளை ' ஈழத்தில் இரண்டாண்டுகள் வாழ்ந்தேன் ' எனும் நூலாக எழுதியுள்ளார். நூலைச் சென்னை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மீனாட்சிபுரம் மத மாற்றத்தை ' விடுதலைபுரம் ' என்னும் காப்பியமாகப் பாடியுள்ளார்.
என்ன? உங்களால் குனிய முடியலையா? அதிமுகவில் இருந்துட்டு இப்படி பேசலாமா? உதயநிதி செம கிண்டல்!
மதமா? மனிதமா? , யார் இந்த இராமன்? , திராவிடர் இயக்க வரலாறு, சோதிடப் புரட்டு - முதலிய நூல்களின் ஆசிரியரான இவர் மார்க்சு, பெரியார், அம்பேத்கார் சிந்தனைகளில் உறுதி காட்டியவர். 'விடுதலை' ,'உண்மை ' இதழ்களின் துணையாசிரியராக முன்பு பணியாற்றியுள்ளார்.
' மக்கள் தாயகம் ' எனும் மாத இதழைக் கடையத்திலிருந்து தொடர்ந்து நடத்தி வந்தார்.கடையம் திருவள்ளுவர்கழகத்தை நிறுவிச் செயல்பட்டு வந்த இவர் , அதன் வெள்ளிவிழாவை அண்மையில் சிறப்புற நடத்தியதோடு , அரிய மலர்ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பிரான்சு, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் சென்று , ஈழஇளையோருக்குத் தமிழ் பயிற்றுவிப்பதைத் தொய்வின்றித் தொடர்ந்து செய்து வந்தார். பேராசிரியர் அறிவரசனார் பெயர் தமிழின எழுச்சி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழ்மீட்புக் களத்தில் வாழ்ந்த அறிவரசனார் புகழ் , உலகத்தமிழர் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.
இன்று (5.3.2020) அவர் உடல் , நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இறுதி வணக்கத்துடன் ஒப்படைக்கப்படும். இவ்வாறு செந்தலை கவுதமன் கூறியுள்ளார்.