அமைச்சருடன் வாக்குவாதம்... புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கைது
நெல்லை: நாங்குநேரியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சி ஒன்றியச்செயலாளர் தளவாய் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிப்படையாகவே அறிவித்துவிட்ட நிலையில், அதிமுகவினர் சிலர் கிருஷ்ணசாமி படம் இடம்பெற்ற துண்டறிக்கைகளை நாங்குநேரியில் விநியோகித்து உள்ளனர். இதனைப் பார்த்து கோபமடைந்த புதிய தமிழகம் கட்சியினர் ஆதரவு இல்லை என கூறியும், எப்படி கிருஷ்ணசாமி படத்தை பயன்படுத்தலாம் என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மூலக்கரைப்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிருஷ்ணசாமி படம் இடம்பெற்றிருந்து துண்டறிக்கையை விநியோகித்து அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு வாக்கு சேகரித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் கட்சி ஒன்றியச்செயலாளர் தளவாய் பாண்டியன், அமைச்சரை வழிமறித்து ஆவேசமாக பேசினார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிமுகவினரும், அமைச்சரும் ஒரு நிமிசம் ஆடிப்போய்விட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து தளவாய்பாண்டியனிடம் பேசி அனுப்பிவைத்தனர். இதனிடையே அமைச்சரை வழிமறித்து தகராறு செய்ததாக கூறி தளவாய் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச்சம்பவம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை கொதிப்படைய செய்துள்ளது. இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது அதிமுகவுக்கு அழகல்ல என கிருஷ்ணசாமி ஆவேசப்பட்டுள்ளார். மேலும், கைது நடவடிக்கை மூலம் உங்களுக்கு தான் தேர்தலில் பின்னடைவு ஏற்படும் எனக் கூறி அதிமுகவினரை அதிரவைத்துள்ளார்.