எடப்பாடியார் தாய் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்திய ராதாபுரம் தொகுதி கிராம மக்கள்
நெல்லை: ராதாபுரம் தொகுதி மீனவ கிராமத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தாயார் மறைவுக்கு பொதுமக்கள் மவுன அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராதாபுரம் தொகுதி பெரியதாழை ஜார்ஜியா மிக்கேல் நகர் ஒரு மீனவ கிராமம். தூத்துக்குடி மாவட்டத்தை ஒட்டிய இந்தப் பகுதி நெல்லை மாவட்டத்தின், குட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட, எல்லை கிராமம் ஆகும்.
இந்த கிராமத்தில் 500 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த இக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோப்புவிளை கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
தற்போது தமிழக அரசு நகரும் நியாய விலை கடை திட்டத்தை அறிவித்துள்ளதை தொடர்ந்து ஜியார்ஜியா மிக்கேல் நகர் பகுதிக்கு நகரும் நியாயவிலை கடை மூலமாக இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
முதல்வரானாலும் தாய்க்கு மகன்தானே.. தாய் இறுதிச் சடங்கில் தளர்ந்து போன எடப்பாடி பழனிச்சாமி.. சோகம்
இதை தொடர்ந்து நகரும் நியாய விலைக் கடை தொடக்க விழா ஜியார்ஜியா மிக்கேல் நகரில் நடைபெற்றது. இவ் விழாவில் இந்த மீனவ கிராமத்தில் வசிக்கும் அனைத்து பொது மக்களும் கலந்துகொண்டனர். ரேஷன் பொருட்களை வழங்கலை துவங்கி வைக்க இக்கிராமத்திற்கு வருகை தந்த ராதாபுரம் சட்டசபை உறுப்பினர் இன்பதுரை விழாவின் துவக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அங்கு வந்திருந்த ஒட்டுமொத்த மீனவ கிராம மக்களும் முதல்வரின் தாயாருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ரேஷன் பொருட்களை கிராம மக்களுக்கு வழங்கிவிட்டு இன்பதுரை எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல ராஜா, மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் உவரி ரமேஷ், அதிமுக நிர்வாகிகள் குளோரி, அல்போன்ஸ், செல்வன், துரைசாமி சுரேஷ், முருகபூபதி உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.