கன்னியாகுமரி டூ ராஜஸ்தான் - 2,580 கி.மீ.. டூ வீலர் வாங்கி குடும்பத்துடன் புறப்பட்ட தொழிலாளர்கள்
நெல்லை: கன்னியாகுமரியில் இருந்து குடும்பங்களுடன் டூ வீலரில் ராஜஸ்தான் நோக்கி புறப்பட்ட தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு அதாவது மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பிற மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு பல லட்சக்கணக்கானோர் நடந்தே சென்ற பெருந்துயரம் நிகழ்ந்தது. ஆனால் மாநில அரசுகள் இப்படி வெளியேறும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி முகாம்களுக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் டூ வீலரில் குடும்பத்துடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். இதற்காக ரூ10,000 முதல் ரூ15,000 வரை செலவழித்து டூ வீலர்களை விலைக்கு வாங்கியும் உள்ளனர்.
12 மருத்துவர்கள்.. 5 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா.. சாப்பாடு கூட இல்லை.. ஹீரோக்களை கைவிடும் தமிழகம்
பிஞ்சு குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் டூ வீலரில் பயணித்த இவர்களில் பலர் நெல்லை மாவட்டத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது தொடர்பாக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூறுகையில், நேற்று இரவு முதலே ராஜஸ்தானை நோக்கி எங்களது பயணம் தொடங்கிவிட்டது. நாங்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஒன்றாக பயணித்தோம். தற்போது போலீசார் எங்களை தடுத்துள்ளனர்.
எங்களுக்கு முன்னரே மேலும் பலர் ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்றார். இவர்கள் அனைவரையும் அரசு முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒடிஷா டூ மே. வங்கம்
இதேபோல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் ஒடிஷாவின் கோபால்பூரில் இருந்து நடைபயணமாக சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் கஞ்சம் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.