திமுகவில் எல்லோரும் மாட்ட போறாங்க.. லிஸ்ட் எடுக்கிறார் மோடி.. குண்டை தூக்கி போடும் ராஜேந்திர பாலாஜி
திமுக, காங்கிரசில் மாட்ட போறாங்க.. என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்
நாங்குநேரி: "எல்லாரும் மாட்ட போறாங்க.. மோடி லிஸ்ட் எடுக்கிறார்.. திமுகவினர் யாரெல்லாம் ஸ்விஸ் பேங்கில கணக்கு வெச்சிருக்காங்க, யாருக்கெல்லாம் ஆசியா, ஆஸ்திரேலியாவில் சுரங்கங்கள் இருக்கு என்பதை கணக்கெடுத்து வருகிறார். ஒருத்தரும் தப்ப முடியாது" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென ஒரு குண்டை தூக்கி திமுக, காங்கிரஸ் மீது போட்டுள்ளார்.
பொதுவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாக பேசக்கூடியவர்... மனசில எதையுமே வெச்சுக்க மாட்டார். பல சமயங்களில் இவரது பேச்சுக்கள் சர்ச்சையானாலும், அவைகள் பெரும்பாலும் வெள்ளந்தியாகவே இருக்கும்.
இப்போது ஒரு விஷயத்தை பற்றி அமைச்சர் சொல்லி உள்ளார். இதை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. நாங்குநேரி பிரச்சாரத்துக்கு வந்தவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக, காங்கிரஸ் பற்றின ஒரு தகவலை சொன்னார்.
விவாதம்
அதில், "ஒன்னுமில்லை.. ரேஷன் கார்டு கேட்டு ஒரு குடும்பம் வந்தாங்க. சரி, காலையில பேசிக்கிடலாம்னு சொல்லி அனுப்பினேன். ஒரு விவாதமும் அப்போ நடக்கல. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இவர்கள் யாரும் அதிமுகவுக்கு வாக்களிப்பதை தடுக்கவும், வாக்குகளை பிரிக்கவும் திமுக நடத்திய நாடகம் இது. பொது மேடையில் பேசாத ஒரு விஷயம் அது.. என் காரை மறித்து பேசிய விஷயம் இது.. இதை விவாதமாக்கிட்டாங்க.
ஊழல்
இப்போ, சுவிஸ் வங்கியில் திமுக, காங்கிரஸில் எத்தனை பேருக்கு எவ்வளவு பணம் இருக்கிறது என்பது பற்றி மோடி கணக்கெடுத்து வருகிறார். ஊழல் செய்த யாரையும் மோடி விட மாட்டார். அத்துடன் ஆசியாவில், ஆஸ்திரேலியாவில் யாருக்கு சுரங்கங்கள் இருக்கின்றன என்பதையும் மோடி கணக்கெடுத்து வருகிறார்.
லிஸ்ட் எடுக்கிறார்
அவர் யாரையுமே விடமாட்டார். அவர் பார்வையில் இருந்து யாருமே தப்பவும் முடியாது. பதுக்கல்கார்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கிவிட்டது என்று மோடியே ஏற்கனவே சொல்லிட்டார். மோடியை நேரடியாக எதிர்க்க முடியாமல், அரசுக்கு ஆதரவாய் இருப்பவர்களை தட்டி விடும் வேலையை பார்க்கிறார்கள்" என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
அமைச்சர்
ஆனால், பிரதமர் இப்படி ஒரு நடவடிக்கையை திமுக, காங்கிரசுக்கு எதிராக எடுத்து வருகிறார் என்பதை பாஜக தரப்பிலேயே இன்னும் யாருமே சொல்லாத நிலையில், அதிமுக அமைச்சருக்கு மட்டும் எப்படி இது தெரிந்தது என்பது நமக்கு தெரியவில்லை.
பிரச்சாரம்
கடந்த 2014-ம் ஆண்டு "சுவிஸ் வங்கியில்.. பதுக்கி வைத்துள்ள இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின்.. பணத்தை மீட்டு இந்திய மக்ககளுக்கு பணத்தை தருவோம்" என்று நாடெல்லாம் வாக்குறுதி தந்து பாஜகவினர் பிரச்சாரம் செய்திருந்தனர். ஒருவேளை பாஜகவின் அதிருப்திக்கு இப்போதைய அதிமுக எந்தவிதத்திலும் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக அமைச்சர் இப்படி சொல்கிறாரா என்றும் நமக்கு தெரியவில்லை.