நெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: பட்டப்பகலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அதிமுக நிர்வாகியின் காரில் இருந்துதான் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். மர்மநபர்கள் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.
பணத்தை பறிகொடுத்தவரின் பெயர் பாண்டியராஜன் என்பதாகும். இவர் ஆலங்குளம் மருதபுரத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்.
நேற்று காலையில் ஆலங்குளம் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்குச் சென்றார். அங்கிருந்து 4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வந்தார். மற்றொரு வங்கிக்குச் சென்று மேலும் 4 லட்சம் பணத்தை எடுத்தார்.
அந்த காரை யாரே நோட்டம் விட்டுள்ளனர். காரில் பணத்தை வைத்து விட்டு திரும்பி வந்த அவர் சிறிது தொலைவில் இருந்த பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு காரை நிறுத்தி விட்டு சார்பதிவாளரை பார்க்கப்போனார் பாண்டியராஜன்.
திரும்பி வந்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் வைக்கப்பட்டிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மர்ம மரணம்- குற்றம் சாட்டும் பொதுமக்கள்
பணம் திருடுபோனது குறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் பாண்டியராஜன். தான் வாங்கிக்குச் செல்வதை நோட்டமிட்ட யாரோதான் தனது பணத்தை திருடிச்சென்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த இந்த கொள்ளைச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.