ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்
நாங்குநேரி: ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் மக்கள் கோரிக்கைகள் விரைவாக நிறைவேறும் வாய்ப்பு உண்டு என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும், நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
மக்களுக்கு நன்மை செய்வதற்காக இல்லாமல், பதவிக்காக வசந்தகுமார் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகியுள்ளார். வசந்தகுமாரின் பேராசையால் நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளரான நாராயணனை மக்கள் எளிதாக அணுக முடியும். காங்கிரஸ் வேட்பாளர் கோடீஸ்வரர். எனவே, சாமானிய மக்களால் அவரை அணுக முடியாது. யாரை தேர்ந்தெடுத்தால் நன்மை கிடைக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்த்து ஓட்டுப்போடுங்கள்.
உங்களுக்கு, நன்மை தரும் வேட்பாளர் வேண்டுமா? அல்லது, வெளியூர் வேட்பாளர் வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இடைத்தேர்தல் வரும்போதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது. உடனே திண்ணை பிரச்சாரம் என்று கிளம்புவார்.
நாங்குநேரி தொகுதிக்கு பலன்தரும் வகையில், ரூ. 200 கோடி செலவில் பச்சையாறு கால்வாய் அகலப்படுத்தப்படும். மக்கள் பிரச்சனைகளை கேட்டு ஸ்டாலினால் என்ன செய்துவிட முடியும். அவர் வாங்கும் மனுக்களை யாரிடம் கொடுப்பார். ஆளும் கட்சியாக இருப்பது அதிமுக. எங்களிடம் வந்துதான் மனுக்களை தர வேண்டியிருக்கும்.
ஆளும் கட்சி வேட்பாளர் வென்றால் மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். அந்த வாய்ப்பு, எதிர்க்கட்சிகளுக்கு குறைவு. தொகுதியை மறந்தவருக்கு அதிமுக வெற்றி மூலம் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.